இந்த உலகில் எந்த நாட்டில் பிறந்தாலும் சரி, ஒரு வயதுக்கு மேல் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் வரும். குறிப்பாக இந்திய ஆண்களுக்கு அந்த அழுத்தம் அதிகம்.
அப்படி ஒருவர் தன் வியாபாரத்துக்காக வெஜ் பிரியாணி விற்பனை செய்தது தவறு எனச் சொல்லி, அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த சாதிய கொடுமையும் அரங்கேறி இருக்கிறது.
உத்திரப் பிரதேசம்
யோகி ஆதித்யநாத் ஆளும், உத்திரப் பிரதேசத்தில், சில தினங்களுக்கு முன், இந்த கொடுமை நடந்து இருக்கிறது. 43 வயது லோகேஷ் என்பவர், கெளதம புத்தா நகர், ரபபுரா (Rabapura) பகுதியில் தள்ளு வண்டிக் கடை போட்டு பிழைப்பவர். இவர் சமீபத்தில் தன் தள்ளு வண்டியில் வெஜ் பிரியாணி விற்று இருக்கிறார். இவர் ஒரு தலித்.
அடி உதை
அந்த வழியாக வந்த மற்ற சமூகத்தினர்கள், பிரியாணி விற்க்கக் கூடாது எனச் சொல்லி, லோகேஷை சரமாரியாக அடித்து இருக்கிறார்கள். அதோடு லோகேஷின் சமூகப் பெயர்களை எல்லாம் சொல்லித் திட்டி இருக்கிறார்கள். அடிக்கும் போதே கையைக் கட்டச் சொல்லி மிரட்டி கண்ணத்தில் அறைந்து இருக்கிறார்கள்.
காவல் துறை
இப்படி லோகேஷை சரமாரியாக தாக்கிய நான்கு நபர்கள் மீது, ராபபுரா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம். லோகேஷ் கொடுத்த புகாரில், தான் வெஜ் பிரியாணி விற்றதாகவும், திடீரென காரில் வந்த நான்கு பேர் தன்னையும், தன் கடையையும் சரமாரியாகத் தாக்கி விட்டதாகவும் சொல்லி இருப்பதாக இந்தியா டுடே தன் செய்தியில் சொல்லி இருக்கிறது.
வைரல்
இப்படி அந்த முகம் தெரியாத நான்கு பேர் தாக்கும் காட்சி, இந்தியா முழுக்க சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ஒருவர் தன் பிழைப்புக்காக, வெஜ் பிரியாணி விற்றதுக்காக இந்த அடியா..? அல்லது அவர் தலித் என்பதால் இந்த அடியா..? எனபதை காவலர்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும்