பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் லோக்பால் அமைப்பு .
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் , கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் என பல சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. டெல்லியின் ஜந்தர் மந்திர் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து தான் இந்தியாவில் ஊழலை தடுப்பதற்கான லோக்பால் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது .

2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பிரதமர் ,முன்னாள் பிரதமர் ,மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை லோகால் அமைப்பு விசாரிக்கும் . இதன் தலைவராக நீதிபதி அஜய் மாணிக்கராவ் கான்வில்கர் செயல்பட்டு வருகிறார். அவருக்கு கீழ் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ஏழு பேரின் பயன்பாட்டுக்காகவும் உயர் ரக bmw கார்களை வாங்க லோக்பால் அமைப்பு அதிகாரப்பூர்வ டென்டரை கோரி இருக்கிறது. இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது . அதாவது 7 உயர் ரக BMW 3 Series Li Cars வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளை நிறத்தில் ஸ்போர்ட் ரக கார்கள் தான் தேவை என அதில் குறிப்பிட்டுள்ளனர் . இந்த மாடல் காரின் விலை இந்தியாவில் சுமார் 70 லட்சம் ரூபாய். லோக்பால் அமைப்பு ஏழு கார்களை வாங்குவதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிதாக வாங்கக்கூடிய கார்களை டெல்லியின் வசந்த் கஞ்சி பகுதியில் உள்ள அலுவலகத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என அந்த டெண்டரில் கூறப்பட்டிருக்கிறது.
கார் வாங்கிய பின் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அந்த காரை இயக்குவது தொடர்பான பயிற்சியை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அந்த டெண்டர் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்சனம் செய்யப்படும் ஒரு விஷயமாக இது மாறி இருக்கிறது .
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பல ஆண்டுகளாக இந்த அமைப்பு காலியாக இருந்தது பின்னர் புதிதாக உறுப்பினர்களை நியமனம் செய்தார்கள், தற்போது அவர்கள் தங்களுக்கு என 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரர்களை வாங்குகிறார்கள் என சாடி இருக்கிறார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான சமா முஹம்மத் லோக்பால் அமைப்பு ஏழு ஆடம்பர பிஎம்டபிள்யூ காரர்களை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்க இருக்கிறது, இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராட என கூறி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் தோற்றுவிக்கப்பட்டது தான் ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கம் என விமர்சித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்கும் நபர்களை அதிகாரிகளாக கொண்ட அமைப்பாக லோக்பால் மாறிவிட்டது என்றும் சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications