இந்தியாவின் மிகப் பெரிய கம்பெனிகளை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் போட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாக இருக்கும்.
இந்த கம்பெனியில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
இப்போது கூட லண்டனைச் சேர்ந்த பிபி (BP) என்கிற கச்சா எண்ணெய் கம்பெனி, ரிலையன்ஸுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஜாயிண்ட் வெஞ்சர் கம்பெனி
ஜியோ பி பி என்கிற பெயரில், ரிலையன்ஸும் பிபி கம்பெனியும் இணைந்து ஒரு புதிய ஜாயிண்ட் வெஜ்சர் கம்பெனியைத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் லண்டனைச் சேர்ந்த பிபி கம்பெனி 49 % பங்குகளையும், இந்தியாவின் ரிலையன்ஸ் மீதமுள்ள 51 சதவிகித பங்குகளையும் வைத்திருப்பார்களாம். தற்போது இந்தியாவில் ரிலையன்ஸுக்கு 1,400 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருக்கிறதாம். இந்த பெட்ரோல் பங்குகளை 5,500 ஆக, அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க இருக்கிறார்களாம்.
1 பில்லியன் டாலர்
தற்போது லண்டனைச் சேர்ந்த பிபி நிறுவனம், ரிலையன்ஸுக்கு 1 பில்லியன் டாலர் பணம் கொடுத்து இருப்பதும் இந்த பெட்ரோல் பங்குகளை இந்தியாவில் அமைக்கத் தானாம். அதோடு ஜியோ பி பி ஜாயிண்ட் வெஞ்சர் நிறுவனம், 30 விமான நிலையங்களில் இருந்து 45 விமான நிலையங்களில் தன் சேவையை விரிவாக்கப் போகிறார்களாம். இந்த கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் 20,000 பேரில் இருந்து 80,000 பேராக, அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க இருக்கிறார்களாம்.
மாற்று எரிசக்திகளும் உண்டு
இந்த ஜியோ பி பி ஜாயிண்ட் வெஞ்சர் நிறுவனம், வெறுமனே பெட்ரோல் & டீசலை விற்காமல், குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் எரிபொருட்களை விற்க இருக்கிறார்களாம். அதோடு எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதிகளையும் கொண்டு வரப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
வியாபாரம் பரவலாக்கம்
லண்டனைச் சேர்ந்த பிபி கச்சா எண்ணெய் கம்பெனி, தன் வியாபாரத்தை உலகம் முழுக்க பரப்பிக் கொள்ள விரும்புகிறது. தன் வாடிக்கையாளர்களையும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறது. அதோடு கச்சா எண்ணெய்யில் இருந்து மாற்று எரிசக்திகளை (குறைந்த கார்பன் எனர்ஜி) நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்களாம்.