இந்தியாவின் சரக்குப் போக்குவரத்தில் மிக முக்கியமானதாக விளங்குவது லாரிகள் தான், சிறிது பெரிது எனத் தமிழ்நாட்டில் சரக்கு லாரி போக்குவரத்து நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டத்தில் சரக்கு லாரி சார்ந்த வர்த்தகம் சற்று அதிகம்.
குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் தமிழ்நாட்டு லாரிகள் சரக்குப் போக்குவரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்துறை வர்த்தகத்தை நம்பியிருப்போர் டிசல் விலை உயர்வால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் காரணத்தால் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
டீசல் விலை பாதிப்பு
தென் பிராந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நல அமைப்பு மத்திய மற்றும் மாநில அரசை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனத் தீர்க்கமான கோரிக்கையை வைத்துள்ளது. இல்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஈரோடு
இந்நிலையில் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா ஈரோட்டில் பேசிய போது, கடந்த ஒரு வருடத்தில் டீசல் விலை 36 முறை அதிகரிக்கப்பட்டுச் சுமார் 28 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
26 லட்சம் சரக்கு லாரிகள்
தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் சுமார் 26 லட்சம் சரக்கு லாரிகள் உள்ளது, இதில் 7 லட்சம் லாரிகள் மட்டுமே அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலை உயர்வால் 40 சதவீத சரக்கு லாரிகள் இயங்க முடியாத நிலை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசு
இந்நிலையில் டீசல் விலையைக் குறைக்க மத்திய மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளோம், ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் டீசல் விலையைக் குறைக்கவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளோம் என .சண்முகப்பா ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.
முக.ஸ்டாலின்
இதேபோல் முதல்வர் முக.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் டீசல் விலையை 4 ரூபாய் வரையில் குறைக்க உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் சண்முகப்பா கேட்டுக்கொண்டு உள்ளார்.
571 சுங்கச்சாவடி
மேலும் இந்தியாவில் தற்போது 571 டோல் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடியின் உரிமங்கள் காலம் முடிந்துள்ளது, ஆனாலும் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த 571 சுங்கச்சாவடியில் 33 சுங்க சாவடி தமிழ்நாட்டில் உள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்
மத்திய அரசு இதுகுறித்து விரைவில் டோல் பிளாசா உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் கட்டாயம் நாடு முழுவதும் இருக்கும் லாரி உரிமையாளர்கள் அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.