இன்றெல்லாம் மக்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்வதை விட டிஜிட்டல் மொபைல் ஆப்-களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எங்கு பார்த்தாலும் QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர். கையில் பணம் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை ஃபோன் மட்டும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த வசதி ஒருபுறம் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருந்தாலும்.. மறுபுறம் ஆன்லைன் மோசடிகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த ஒரே ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள்.. உங்கள் ஓடிபி-ஐ சொல்லுங்கள்.. என்று ஒவ்வொரு முறையும் புதுப்புது டிரிக்கை கண்டுபிடித்து மக்களை ஏமாற்றி அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இப்படி ஏமாறும் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்ததை தெரிந்து கொள்ளவே மாதங்கள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு என்ன பயன்? தங்களுடைய பணம் கிடைக்கவே கிடைக்காது என்ற சோகத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஒரு ஆறுதலான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஆர்பிஐ-யின் புதிய விதிமுறை : மக்கள் ஏதேனும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்து விட்டால் இந்திய ரிசர்வ் வங்கி பொறுப்பேற்று இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மோசடியின் மூலம் நீங்கள் எவ்வளவு தொகையை இழந்திருக்கிறீர்களோ அதில் சுமார் 85 சதவீதம் வரையிலான தொகையை ஆர்பிஐ இழப்பீடாக வழங்கவுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ.25,000 வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000-த்திற்குள் நீங்கள் பணத்தை இழந்திருந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு பெற முடியும். தற்போதைக்கு இந்த விதி சிறிய மதிப்புள்ள மோசடிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சங்களில் பணம் இழந்தால் இந்த விதி பொருந்தாது. இதற்கு முன்னர் ஆன்லைனில் பணத்தை இழந்து விட்டால் குடும்பத்தினரிடமே சொல்ல முடியாமல் தவித்து.. பின்னர் தற்கொலை நிலைக்கு ஆளானோர் பலர்.
இதைத் தெரிந்து கொண்டு ஆர்பிஐ நேரடியாக களத்தில் இறங்கி மோசடிக்கு பொறுப்பேற்கவுள்ளது. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது உண்மையிலேயே மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சைபர் குற்றவாளிகளால் இதற்கு முன்னர் வரை என்ன செய்ய வேண்டும் என்று செய்வதறியாமல் திகைத்த மக்களுக்கு உண்மையிலேயே இந்த அறிவிப்பு பெரும் நிவாரணமாக அமைந்திருக்கிறது.
இந்த விதி எப்போது அமலுக்கு வரும்?: இதற்கு முன்னர் ஜூலை 2026-ஆம் ஆண்டு முதல் இழப்பீடு வழங்க ஆர்பிஐ முடிவு செய்திருந்தது. ஆனால் ஏதேனும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு வங்கிகள் தங்களுடைய தொழில்நுட்ப விஷயங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் அல்லவா.. அதற்காக தற்போது கூடுதல் அவகாசம் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே ஐம்பதாயிரத்திற்குள் பணத்தை இழந்த மக்களுக்கு வருகின்ற 2027-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. எனவே இந்த தேதிக்கு பின்னர் ஏதேனும் மோசடி சம்பவங்கள் நடந்தால் இந்த இழப்பீடு விதி பொருந்தும்.
ஏமாற்றப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?: உங்கள் கணக்கிலிருந்து பணம் பறிபோய் இருந்தால் பதற்றம் அடையாமல் கீழ்காணும் விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் நீங்கள் எங்கு வங்கி கிளை வைத்திருக்கிறீர்களோ? அந்த வங்கியின் ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்ள வேண்டும். பின்னர் உங்களுடைய அக்கவுண்ட்டை பிளாக் செய்ய சொல்ல வேண்டும். அடுத்தபடியாக 1930 என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய வேண்டும். இதற்காகவே அரசு நேஷனல் சைபர் பிரைம் போர்ட்டலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போர்ட்டலிலும் ஆன்லைனில் புகாரை பதிவு செய்யலாம்.
நாம் விவரம் தெரியாமல் ஏமாறுவதற்காக ஆர்பிஐ தான் இழப்பீடு வழங்குகிறதே என்று எண்ணி அசால்டாக இருந்து விடக்கூடாது .தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர், யுபிஐ ஐடி போன்றவற்றை வழங்கக்கூடாது. அடையாள மோசடியும் அதிகளவில் நடப்பதால் ஆதார், பான் விவரங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications