பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து, தற்போது சமையல் கேஸ் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ,இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் கேஸ் விலையானது, சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரிப்பு
இந்த மாதத்தில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலையானது 75 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், எரிபொருட்கள் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றன. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலையானது 75 ரூபாய் அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல்
இந்த விலை அதிகரிப்பானது இந்தியா முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டரின் விலை 769 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 745.50 ரூபாய்க்கும், இதே மும்பையில் 769 ரூபாய்க்கும், இதே சென்னையில் 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
19 கிலோ சிலிண்டர் விலை
இதே 19 கிலோ சிலிண்டரின் விலை, இம்மாத தொடக்கத்தில் அதிகரித்திருந்த நிலையில், அதன் விலையும் விரைவில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் சமையல் எரிவாயு பயன்பாடானது அதிகரித்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்ந்து வருவது சாமனியர்களுக்கு மேலும் பாதிப்பினைக் கொடுக்கும். ஏற்கனவே அனுதினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் விலையானது டெல்லியில் 88.99 ரூபாயாகவும், இதே பெங்களூரில் 91.19 ரூபாயாகவும், இதே மும்பையில் 95.46 ரூபாயாகவும், சென்னையில் 91.19 ரூபாயாகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே டீசல் விலையானது இன்று டெல்லியில் 79.35 ரூபாயாகவும், இதே பெங்களூரில் 84.12 ரூபாயாகவும், இதே மும்பையில் 86.34 ரூபாயாகவும், சென்னையில் 84.44 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.