போர் பதற்றம் துவங்கியதிலிருந்தே இந்தியாவில் எக்கச்சக்க பிரச்சனைகள், ஏராளமான விலை உயர்வுகள். கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் கடுமையான அதிகரிப்பு தென்பட்டது. ஆனாலும் எல்பிஜி விலை மாற்றமின்றி உள்ளது. OMC நிறுவனங்கள் அவ்வப்போது எல்பிஜி விலையில் சில மாற்றங்களை அறிவிக்கும். இந்த முறை எந்த விலை உயர்வும் இன்றி சிலிண்டர் விலை அப்படியே தொடர்கிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டில் உபயோகிக்கப்படும் டொமெஸ்டிக் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.928.50-க்கு விற்பனையாகிறது, கொல்கத்தாவில் ரூ.939-க்கும், டெல்லியில் ரூ.913-க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
எல்பிஜி சிலிண்டர் விலை அதிகரிக்காமல் இருப்பது இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ் ஆக அமைந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சந்தையில் கடும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. உலகிற்கே எரிபொருள் சப்ளை செய்யும் முக்கிய வழித்தடமாக ஹர்மோஸ் ஜலசந்தி இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கு கப்பல் சென்றால் போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற காரணத்தினால் உலக நாடுகள் பயந்து இந்த பகுதியை போக்குவரத்துக்கு பயன்படுத்த தயங்குகின்றன.
இவ்வளவு நெருக்கடி இருந்தும் இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரிக்காமல் இருப்பது தான் ஹைலைட். வீட்டில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை அதிகரித்தாலும், ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள கமர்சியல் சிலிண்டரின் விலை ரூ. 900-த்திற்கும் மேல் உயர்ந்து ரூ.3000-த்தை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இன்றைய தினம் கமர்சியல் சிலிண்டரின் விலையிலும் மாற்றமில்லை. முக்கியமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஹோட்டல்கள் பாரம்பரிய முறையில் அடுப்பில் சமைப்பதற்கு மாறி வருகின்றனர். அதுவும் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வை சமாளிக்க முடியாமல் பல ஹோட்டல்கள் மூடப்பட்டன.
மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள் கேஸ் விலையை கருத்தில் கொண்டு தங்கள் உணவுப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கத் தொடங்கினர். இதனால் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 இட்லி 15 ரூபாயாக மாறியது. 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பரோட்டா 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் தான் கேஸ் விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் போர் பிரச்சனையால் எப்போது விலை உயர்வு வரப்போகிறது? என்பதை யூகிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, கப்பல் வாடகை என பல விஷயங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கின்றன.
இந்திய ஆயில் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசு நிறுவனங்கள், விலை அதிகரிப்பை மக்கள் தலையில் ஈடுகட்டாமல் தற்காலிகமாக நஷ்டத்தை தாங்களே தாங்கி வருவதாகவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் தற்போது 13 எல்பிஜி சரக்கு கப்பல்கள் சிக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து அனைத்து இந்தியக் கப்பல்களையும் வெளியேற்றுவதே எங்களின் முன்னுரிமை என்று கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செகரட்டரி முகேஷ் மங்கள் தெரிவித்திருக்கிறார். இதில் நல்ல விஷயம் என்ன தெரியுமா? இது போன்ற போர் பதற்றம் ஏற்பட்டு ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்படுவதற்கு முன்னரே ஒரு சில இந்தியக் கப்பல்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறிவிட்டன. சர்வதேச சந்தையில் இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தற்போது வரை கேஸ் விலை உயராமல் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களிலும் இவை தொடருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications