டெல்லி: தொடர்ந்து மூன்றாவது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து இருக்கிறது. 2019 நவம்பர் மாதத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை 76 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய விலைப் பட்டியல் விவரங்கள் படி 14.2 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு டெல்லியில் 681 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தாவில் இதே 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 706 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரத்தில் இதே 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 651 ரூபாய்க்கும் சென்னையில் 696 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அமல்
இன்று நவம்பர் 01, 2019 வெள்ளிக்கிழமை முதல் இந்த விலை பட்டியல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றம் செய்வார்கள். அப்படி 2019 நவம்பர் மாதத்திற்கு 76 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறார்கள்.
மூன்று மாதம்
கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 15 ரூபாய் விலை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதே போல அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துக்கு 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 15 ரூபாய் 50 பைசா விலை உயர்த்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த நவம்பர் 2019 மாதத்துக்கு 76 ரூபாய் என மொத்தமாக கணக்கிட்டுப் பார்த்தால், 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கு (15 + 15.5 + 76) 106 ரூபாய் 50 பைசா விலை உயர்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஓகே தான்
கடந்த நவம்பர் 2018-ல், டெல்லி நகரத்தில் இதே 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 939 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது எப்படி கணக்கிட்டு பார்த்தாலும் சுமாராக 250 ரூபாய் விலை குறைவாகத் தான் எல்பிஜி சிலிண்டர்கள் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.அவர்கள் சொல்வதும் உண்மை தானே..! 250 ரூபாய் என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பெரிய தொகை தான்.
மானியம் வங்கிக் கணக்கில்
எல் பி ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை அனைத்து தரப்பு மக்களும் சந்தை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியம் நேரடியாக நம் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேர்ந்து விடும் என்பதும் இங்குக் கவனிக்க வேண்டி இருக்கிறது. அரசு வழங்கும் இந்த மானியத் தொகையும் ஒவ்வொரு மாதமும் மாறுபடும் என்பதும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.