போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் முதல் கேஸ் வரை, இந்தியாவில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரச்சனை LPG சிலிண்டர் தட்டுப்பாடு. ஹர்மோஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கிய காரணத்தினால் இந்தியாவிற்கு வரும் எல்பிஜி இறக்குமதி பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 68 சதவீத குடும்பங்கள் எல்பிஜி சிலிண்டர் பெறுவதில் தாமதத்தை சந்தித்துள்ளன, இதற்கு முந்தைய வாரம் 57 சதவீத குடும்பங்கள் எல்பிஜி கேஸ் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பொதுமக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியை வெளியிட்டிருக்கிறது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பைப்பிடு நேச்சுரல் கேஸ் (PNG கேஸ்) பெறுவதற்கான விதிகளில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. தற்போது பல நகரங்களில் PNG என்று சொல்லப்படுகிற குழாய் மூலமாக வீட்டிற்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்னர் பிஎன்ஜி பெறுவதற்கு எல்பிஜி சிலிண்டரை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் சிலிண்டர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அரசு சில தளர்வுகளை அறிவித்திருக்கிறது. தற்போதய சூழலில் மக்கள் கேஸ் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 300 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கூடுதலாக கைக்காசை போட்டு, வெளியில் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பிஎன்ஜி இணைப்பு பெறுவதில் உள்ள விதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் வீட்டுக்கு PNG கேஸ் இணைப்பு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுடைய பழைய எல்பிஜி சிலிண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டாம். 30 நாட்கள் வரை உங்களுடைய LPG இணைப்பை ரத்து செய்ய கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
அதோடு நீங்கள் தற்காலிகமாக PNG இணைப்புக்கு மாறினாலும், உங்களுடைய பழைய LPG சிலிண்டர் கனெக்ஷனை முழுமையாக ரத்து செய்யாமல் "டிரான்ஸ்பர் வவுச்சர்" ஆக மாற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த வசதி யாருக்கு தெரியுமா? அடிக்கடி வேலைக்காக ஊர் மாறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், இடம்பெயறும் குடும்பங்களுக்கு இந்த வவுச்சர் உதவிகரமானதாக இருக்கும்.
ஏனெனில் தற்போது அனைத்து ஊர்களிலும் PNG கேஸ் கிடைப்பதில்லை. ஒரு சில ஊர்களில் மட்டுமே குழாய் மூலம் எரிவாயு வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீங்கள் இடம் பெயர்ந்து செல்லும் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ பிஎன்ஜி வசதி இல்லாத பட்சத்தில் நீங்கள் இந்த வவுச்சரை காட்டி மீண்டும் எல்பிஜி சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம்.
இது ஒரு புறம் இருந்தாலும், எல்பிஜி போன்ற எரிபொருளை மட்டுமே சார்ந்திருக்காமல் அதைவிட குறைவான செலவில் சமையல் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பத்தையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த திங்களன்று அறிவித்துள்ளார். அதாவது நீரில் 7 சதவீதம் வரை எத்தனாலைக் கலக்கும் போது அடுப்பு எப்படி எரிகிறதோ? அதே போன்ற தீ உருவாகும். இது சமையல் எரிவாயுவை விட விலை குறைவு. மேலும் நம் நாட்டிலேயே இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் மக்களுக்கும் அரசுக்கும் வசதியாக இருக்கும். வணிக ரீதியாக பார்க்கும் போது எல்பிஜி சிலிண்டர்களை விட எத்தனால் அடுப்பு மிகவும் மலிவானது என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஒருவேளை இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்தால் பிற நாடுகளை எரிபொருளுக்கு சார்ந்து இருக்கும் அவசியம் வெகுவாக குறையும். சந்தைகளில் மக்களும் தங்களுடைய கைக்காசை போட்டு சிலிண்டர் வாங்கும் அவலம் ஏற்படாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications