ஐக்கிய அரபு நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லூலூ குரூப், தனது ரீடைல் வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்யத் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஏற்கனவே பெங்களூரில் மிகப்பெரிய மால்-ஐ திறந்த லூலூ குரூப்-க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த காரணத்தால் தற்போது அடுத்தடுத்த முதலீடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது கர்நாடகாவில் புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் லூலூ குரூப் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.
எம்ஏ யூசப் அலி
எம்ஏ யூசப் அலி தலைமையிலான லூலூ குரூப் 4 ஷாப்பிங் மால், ஹைப்பர்மார்கெட் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கான புட் ப்ராசசிங் யூனிட் ஆகியவற்றை அமைக்கச் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யக் கர்நாடாக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
லூலூ குரூப்
லூலூ குரூப்-ன் இந்த 2000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு நடப்பு நிதியாண்டிலேயே வரும் கர்நாடகாவில் செய்யப்படும் என உறுதி அளித்து டாவோஸ்-ல் எம்ஏ யூசப் அலி மற்றும் கர்நாடக முதல் பசவராஜ் மொம்பை ஆகியோர் முன்னிலையில், கர்நாடக மாநிலத்தின் தொழிற்துறை இணை தலைமைச் செயலாளர் ஈவி ரமணா ரெட்டி மற்றும் லூலூ குரூப் தலைவர் எவி அனந்த் ராம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரூ.2000 கோடி முதலீடு
இந்த முதலீட்டின் மூலம் உருவாக்கப்படும் 4 ஷாப்பிங் மால், ஹைப்பர்மார்கெட் மற்றும் புட் ப்ராசசிங் யூனிட் ஆகியவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என லூலூ குரூப் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள்
லூலூ மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளராக உள்ளது, மேலும் இக்குழு நிறுவனமான ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ், அரிசி, பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை முக்கிய ஏற்றுமதி பொருட்களாகக் கொண்டுள்ளது, மேலும் லூலூ குரூப் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.