மதுரையைச் சேர்ந்த தம்பதி கௌரி கோபிநாத், கிருஷ்ணன் சுப்ரமணியன். கௌரி கோபிநாத் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். சென்னையில் உள்ள ஒரு காப்பரேட் நிறுவனத்தில் கிருஷ்ணன் சுப்ரமணியன் வேலை பார்த்து வந்தார். இருவருக்குமே எப்படா சொந்த ஊரான மதுரைக்கு போவோம் என்றே எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்குமாம்.
அதேபோல் நகரங்களில் பெருகிவரும் பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நினைப்பும் ஒன்றாக இருந்து வந்தது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தது. குறிப்பாக ஒரு முறை பயன்படுத்தும் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள். நாங்களும் அதை பயன்படுத்துகிறோம். இதை எப்படியாவது நிறுத்த வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு இதனால் ஏற்படும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு ஏதாவது வழியை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான வழிமுறைக்கு மாற வேண்டும். இப்படித்தான் நாங்கள் இருவரும் எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்போம் என்று தம்பதியர் கூறினர்.
இந்த நிலையில் அவர்கள் எல்லோபேக் என்ற பை தயாரிப்பு நிறுவனத்தை 2014இல் தொடங்கினர். தொடக்கத்தில் தங்களது நண்பர்களுக்கு இதுபற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். உள்ளூர் டெய்லர்களை வைத்து துணிப்பைகளை தயாரித்து வளர்ந்து வரும் தேவையை சமாளித்தனர்.
2019இல் தங்களது வேலையைவிட்டுவிட்டு முழுநேரத் தொழிலில் இறங்கினர். தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாகப் பயன்படுத்திவந்த மஞ்சப்பை, மஞ்சள் நிறத்திலான துணிப்பையின் பெயர் அவர்களது நினைவுக்கு வந்தது.
அதையே தங்களது பிராண்டு பெயராக மாற்றினர். இந்தத் துணிப்பைகள் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருந்தது. சணலும் பருத்தியாலும் கலந்து செய்யப்பட்ட இந்த பையை பல்வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தலாம்.
பேக்கேஜிங் பைகள், கார்மென்ட் வைக்கும் பைகள், தொங்கும் கைப்பைகள் என பல்வேறு விதமான பைகளை அவர்கள் தயாரித்தனர். அவற்றின் விலை ரூ.20 முதல் ரூ.200 விற்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்தப் பைகள் தயாரிக்கப்பட்டன. ஒரு வெப்சைட்டை தொடங்கி அதிலும் பல்வேறு சோசியல் மீடியா தளங்களிலும் இந்தப் பைகளை அவர்கள் மார்க்கெட்டிங் செய்தனர். தங்களது அலுவலகத்திலும் விற்றனர்.
பல்வேறு ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் இந்தப் பைகளை அதிகளவில் ஆர்டர் செய்தன. வியாபாரம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தத் தம்பதியரின் புண்ணியத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பைக்கு இப்போது மவுசு அதிகரித்து விட்டது. இந்த நிறுவனம் கொரோனாவுக்கு பின்பு வருடம் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
இந்நிறுவனம் ஏப்ரல் 23 முதல் மார்ச் 24 வரையிலாக காலக்கட்டதில் மொத்தம் 1.9 லட்சம் பைகளை தயாரித்து 1.6 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது என இந்நிறுவனத்தின் நிறுவனர் லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு உற்பத்திக்கு உதவிய உற்பத்தியாளர்களுக்கு சுமார் 36 லட்சத்தை வருமானமாக பகிரப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் வாயிலாக சுமார் 55 பெண்கள் வேலைவாய்ப்பு, வருமானம் மூலம் பலன் பெற்றுள்ளனர். இக்காலக்கட்டத்தில் சுமார் 196 வொர்க்ஷாப் நடத்தியுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் லின்கிடுஇன் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்நிறுவனம் இக்காலக்கட்டத்தில் 13.8 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் 4.4 லட்சம் கார்ப்ஸ் நிதியாகும்.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications