இந்தியாவில் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசலும் விற்பனை செய்யத் துவங்கப்பட்டு உள்ளது.
புனே நகரத்தை சேர்ந்த 25 வயதான அதிதி போசலே வாலுஞ்ச் மற்றும் அவரது கணவர் சேத்தன் வாலுஞ்ச் ஆகியோர் இணைந்து தனது குடும்பப் பெட்ரோல் பங்க் வர்த்தகத்தின் நிர்வாகத்தைக் கையில் எடுக்கும் போது அவர்கள் புனே அருகில் இருக்கும் MSME நிறுவனங்களுக்குத் தேவையான டீசலை கடன் அடிப்படையில் 15 நாள் பேமெண்ட் அவகாசத்துடன் அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து தொடர்ந்து MSME நிறுவனங்களுக்கு அளித்து வந்தனர்.
இப்படிப் பல வருடங்கள் நடந்துகொண்டு இருந்தது 2016ல் புனே நகரத்தில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது, அப்போது டீசலுக்கான டிமாண்ட் அதிகரித்த காரணத்தால் காலை முதல் டீசல் சப்ளை அதிகமாகச் செய்யப்பட்ட நேரத்தில் ஈகாமர்ஸ் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டது.
இந்த ஒரு தருணம் தான் 63 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்க மிக முக்கியமான காரணமாக இருந்தது.
ஈகாமர்ஸ் டெலிவரி
பிசியாக வேலை செய்துகொண்டு இருக்கும் போது ஈகாமர்ஸ் டெலிவரி நகழ்வின் மூலம் ஏன் டீசலை ஆன்லைனில் விற்பனை செய்யக் கூடாது என்ற ஐடியா தோன்றியது. தினசரி வாழ்வில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் தான் பெரிய வர்த்தகத்திற்கான அடித்தளமாக இருக்கும்
ரத்தன் டாடா
இந்த ஐடியாவை வடிவத்திற்குக் கொண்டு வந்து செயல்படுத்த முயற்சி செய்த போது 2017ல் ரத்தன் டாடா -விடம் இந்த ஐடியாவை அதிதி போசலே வாலுஞ்ச் மற்றும் அவரது கணவர் சேத்தன் வாலுஞ்ச் ஆகியோர் விவரித்தனர். அன்று முதல் ரத்தன் டாடா இந்நிறுவனத்தை வழி நடத்தி வருகிறார்.
டீசல் விற்பனை
இதைத் தொடர்ந்து டெல்லி-க்கு சென்று டீசலை ஆன்லைனில் விற்பனை செய்ய அதாவது ஈகாமர்ஸ் முறையில் டெலிவரி செய்யத் தேவையான உரிமத்தை பெற்றுள்ளனர். இந்தியாவில் தினமும் 7.71 மில்லியன் டன் டீசல் கடனில் விற்பனை செய்யப்படுகிறது. இது பெரிய வர்த்தகமாக இருக்கும் காரணத்தால் வேகமாகச் செயல்படத் துவங்கினர்.
மொபைல் செயலி
MSME நிறுவனங்களுக்குத் தேவையான டீசல் (குறைந்தபட்சம் 100 லிட்டர்) மொபைல் செயலி வாயிலாக ஆர்டர் செய்து குறித்த நாளில் டெலிவரி செய்யும் கட்டமைப்பைக் கொண்ட Repos என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினர் அதிதி போசலே வாலுஞ்ச் மற்றும் சேத்தன் வாலுஞ்ச்.
56 கோடி ரூபாய்
எரிசக்தி விநியோகம் செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ரெபோஸ் டாடா சன்ஸ் தலைவர் எமரிட்டஸ் ரத்தன் டாடா மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 56 கோடி ரூபாய் முதலீட்டை தனது ப்ரீ-சீரிஸ் A முதலீட்டுச் சுற்றில் திரட்டியுள்ளது.
220 நகரங்கள்
தற்போது Repos நிறுவனம் 7.5 மில்லியன் டாலர் முதலீட்டில் நாட்டின் 220 நகரங்களில் டீசலை ஆன்லைன் ஆர்டர் பெயரில் டெலிவரி செய்யப்படுகிறது.Repos நிறுவனம் தனக்குத் தேவையான டீசலை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது.
63 கோடி ரூபாய் வருமானம்
ஒவ்வொரு மாதமும் Repos நிறுவனம் சுமார் 60-70 கிலோ லிட்டர் டீசலை விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த ஒரு வருடம் மட்டும் சுமார் 63 கோடி ரூபாய் வருமானத்தை ஈர்த்துள்ளது. தற்போது MSME நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் மருத்துவமனை, ஹோட்டல், கட்டுமான நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள் எனப் பல துறை சார்ந்த நிறுவனங்களுக்கு டீசல்-ஐ டோர் டெலிவரி செய்து வருகிறது.
எலான் மஸ்க் Mars
அடுத்தச் சில மாதத்தில் விரிவாக்க பணிகளுக்காக 300 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு இருக்கும் Repos நிறுவனத்தின் தலைவர் அதிதி போசலே, எலான் மஸ்க் Mars-க்கு சென்றால் கூட நாங்கள் டீசல் டெலிவரி செய்வோம் என உறுதியாகக் கூறுகிறார்.
Repos நிறுவனம் - Repos Pay
சமீபத்தில் Repos நிறுவனம் கடன் அடிப்படையில் டீசல் வழங்கும் நிலையில், இதை முறையாகக் கொண்டு செல்லவும் நாடு முழுவதும் எவ்விதமான தங்குதடையும் இல்லாமல் விரிவாக்கம் செய்யக் கடன் சேவையை வங்கிகளுடன் இணைந்து அளிக்க Repos Pay புதிய எனர்ஜி பின்டெக் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.