சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.திமுக அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. அண்மையில் தான் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையாக பெற்று வருகிறார்கள்.

பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த பணம் வர வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொடங்கிய இந்த மகளிர் உரிமை திட்டத்தை பின்பற்றி பல்வேறு மாநில அரசுகளும் இதே போன்ற மகளிருக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை வழக்கமாக 1000 ரூபாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5000ரூபாயாக அரசு வரவு வைத்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் தேர்தலை காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமை தொகையை முடக்க பார்க்கிறார்கள் எனவே முன்பணமாக 5000 ரூபாயை வரவு வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
"தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!" என பதிவு செய்துள்ளார்.
இதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3000 ரூபாயும் கோடைகால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாயும் என 5000 ரூபாயாக 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கும் இன்றே வரவு வைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். தேர்தல் முடிந்து திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது மகளிர் உரிமை தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என அவர் வாக்குறுதி தந்திருக்கிறார்.
தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிடும், அந்த சமயத்தில் மகளிர் உரிமை தொகை வழங்க முடியாமல் போகலாம் என்பதால் அரசு முன்கூட்டியே 5000 ரூபாய் என வரவு வைத்துள்ளது. முன்னதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகை 2000 ரூபாய் என உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.


Click it and Unblock the Notifications