இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ள காரணத்தால் அம்மாநிலம் முழுவதும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகாபலேஷ்வர் மலை தொடர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கிளப்-க்கு சொந்தமான கால்ப் கோர்ஸ் மைதானத்தில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி மற்றும் அவர்களது பிள்ளைகள் வாக்கிங் சென்ற வீடியோ வெளியாகி, சமூகவலைத்தளத்தில் பெரிய அளவில் வைரலானது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் போது எப்படிப் பொதுமக்களுக்கு இதுபோன்ற இடங்களைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், மகாபலேஷ்வர் நிர்வாக அதிகாரிகள் வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்து அந்தத் தனியார் கிளப்-க்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் 11 குழிகள் கொண்ட கால்ப் கோர்ஸ் மற்றும் மைதானம் அடங்கிய இந்தத் தனியார் கிளப்புக்கு மகாபலேஷ்வர் நிர்வாக அதிகாரிகளின் நோட்டீஸ் அளிக்கப்பட்ட பின்பு பொதுமக்கள் அனுமதி அளிப்பதை மறுத்துள்ளது மட்டும் அல்லாமல் முழுமையாகக் கிளப்-ஐ மூடியுள்ளனர்.
மகாபலேஷ்வர் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில் அனில் அம்பானி மற்றும் அவர்களது குடும்பம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு முன்பாகவே மகாபலேஷ்வர் பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.