உலகின் முன்னணி பேபி பவுடர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உரிமத்தை மகாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்துள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் சருமம் சார்ந்த பிரச்சினை ஏற்படலாம் என்று சோதனையில் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிப்பு லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் பாதுகாப்பானவை என ஜான்சன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன்
உலகின் முன்னணி பேபி பவுடர் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தும் கனிமங்கள் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எனவே இந்த பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வந்தது.
உரிமம் ரத்து
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு இந்த பவுடரில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்த ஆய்வு முடிவில் இந்த பவுடரை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் சரும பிரச்சனை உள்பட ஒருசில உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு, ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை ரத்து செய்தது.
ஜான்சன் & ஜான்சன் விளக்கம்
மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு பாதுகாப்பானவை என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சோளமாவு பேபி பவுடர்
2023 ஆம் ஆண்டில் உலகளவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடருக்கு மாறுவோம் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கடந்த மாதம் உறுதி செய்தது என்பது தெரிந்ததே.