இந்தியாவில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சந்தையின் டிமாண்டுக்கு ஏற்ப தனது வர்த்தகத்தையும் தயாரிப்பையும் மாற்றி வருகிறது.
குறிப்பாக உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் பல முக்கியத் திட்டத்தைக் கையில் எடுத்த பின்பு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்கள் கிளீன் எனர்ஜி பிரிவு வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போல் அல்லாமல் இந்தியாவில் வேகமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தும் நிலை வராது எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சந்தைக்கு ஏற்ப குறைவான விலையில் தரமாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தால் மக்கள் அதிகளவில் விரும்பி வாங்குவார்கள் என்பதைச் சமீபத்தில் டாடா நெக்சான்-ம், இரு சக்கர வாகன பிரிவில் ஓலாவும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் டிவிஎஸ்
இந்த நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து முதலீட்டைத் திரட்ட முடிவு செய்தது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நிறுவனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இதைத் தொடர்ந்து தற்போது நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா புதிய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் கிளீன் எனர்ஜி வாகன பிரிவில் பெற ஆர்வம் காட்டியுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் புதிய வளர்ச்சி பிரிவாகப் பார்க்கப்படுகிறது.
16 எலக்ட்ரிக் வாகனங்கள்
மேலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2027ஆம் ஆண்டுக்குள் 16 எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் 50 சதவீதம் இந்தியாவில் தற்போது அதிகம் விற்கப்படும் எஸ்யூவி கார்களாக இருக்கும் என்றும் மீதமுள்ளவை லைட் கமர்சியள் வாகனங்களாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
விவசாய வாகனங்கள்
இதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தனது விவசாய வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வர்த்தகத்தை 2027ஆம் ஆண்டுக்குள் 10 மடங்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
புதிய முதலீடு
அதாவது வருடம் 5000 கோடி ரூபாய் இப்பரிவில் வருமானம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள நிலையில் இப்பிரிவிலும் முதலீட்டாளர்களை ஈர்க்க மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முடிவு செய்துள்ளது.