இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் மஹிந்திரா குழுமம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் பல துறைகளில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது. குறிப்பாக வாகன வியாபாரத்தில் விவசாயிகளுக்கு உதவும் டிராக்டர் உற்பத்தியில் மிக பேர் போனது. இதில் புகழ்பெற்ற ஒரு நிறுவனமும் கூட. இப்படி உலகளவில் மஹிந்திராவின் வாகனங்களுக்கு தனி மரியாதை உண்டு.
இப்படி ஒரு நிறுவனம் சுமார் 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். அதெல்லாம் சரி எதற்காக இந்த பணி நீக்கம் செய்தது? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன காரணம்
கடந்த ஆண்டு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கொரோனாவின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக வாகன வணிகத்தில் பெரும் சரிவினைக் கண்டது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த நிறுவனம், இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வாகனத்துறையில் வீழ்ச்சி
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் உள்நாட்டு வாகன தொழிலில் முடக்கம் ஏற்பட்ட நிலையில், 300 நிர்வாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது மஹிந்திரா. மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு, இந்த நிதியாண்டில் இதுவரை 27.52 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தொழில் மதிப்பு 13.2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
பல உயர் அதிகாரிகள் பணி நீக்கம்
மஹிந்திராவின் இந்த பணி நீக்கத்தில் பல மூத்த உயர் அதிகாரிகளும் உண்டு. குறிப்பாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பார்த்தசாரதி உள்பட என்றும் கூறப்படுகிறது. இவர் தவிர இன்னும் மஹிந்திரா குழுமத்தின் மொபைலிட்டி சேவையின் தலைவர், இந்த குழுமத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 300 பேர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பின் ஒரு பகுதி
நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு எதிர்கால பணிகளுக்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதிக சுறுசுறுப்பு, அதிக உற்பத்தி திறன் மற்றும் விரைவான வளர்ச்சிக்கு அமைப்புக்கு தேவையான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.