இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான பவன் கோங்கா ஏப்ரல் 2, 2021 முதல் பதவி விலகியுள்ள நிலையில், இப்பதவியில் தற்போது புதிதாக அனிஷ் ஷா நியமிக்கப்பட்டு உள்ளார்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அனிஷ் ஷா விரைவில் வங்கி உரிமம் பெற விண்ணப்பம் செய்யும் பணிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு தற்போது அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் மஹிந்திரா பூர்த்தி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள்
இந்திய வங்கிகளின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரும் நிலையில் இதைச் சரி செய்யப் பல வழிகளை மத்திய அரசும், தனியார் வங்கிகளும் கையாண்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட 6 மாத கடன் சலுகைக்கு இந்திய வங்கிகள் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வாராக் கடன் பிரச்சனை
இதோடு பல லட்சம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வர்த்தக இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றின் காரணமாக வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியாமல் உள்ளதால் வாராக் கடன் அதிகரித்துள்ளதாகவும் வங்கிகள் தெரிவித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கொரோனா
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் வர்த்தகத் தலைநகர் மும்பை அமைந்திருக்கும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 57,000 கடந்துள்ள நிலையில் வார இறுதி நாட்களும், இரவு 8 மணியில் இருந்து லாக்டவுனும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பங்குச்சந்தையை மட்டும் அல்லாமல் வங்கித்துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.
தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சில வாரங்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி நிறுவனங்கள் நிதிநிலையில் மேம்பட்டு உள்ள தனியார் நிறுவனங்கள் இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் இடைவேளையைக் குறைக்க வங்கிகளைத் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் வங்கிகள் துவங்க தற்போது ஆர்வம் காட்டி வருகிறது.
தனியார் வங்கி அல்லது பொதுத்துறை வங்கி
இதன் அடிப்படையில் தற்போது மஹிந்திரா புதிதாக வங்கியைத் திறக்க திட்டமிட்டு உள்ளது. புதிய வங்கி துவங்குவது குறித்து அனிஷ் ஷா கூறுகையில் வங்கியைத் துவங்கி மஹிந்திரா குழுமம் தனியார் வங்கி அல்லது பொதுத்துறை வங்கி எதைக் கைப்பற்றுவது என்ற முடிவை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய துறையில் வர்த்தக விரிவாக்கம்
இதேவேளையில் மஹிந்திரா குழுமத்தில் எவ்விதமான நிர்வாக மாற்றமும் ஏற்படாது என்றும் பல புதிய துறைகளில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் ஆரம்பம் முதலே எடுக்கப்பட்ட உள்ளது என்றும் அனிஷ் ஷா தெரிவித்துள்ளார்.