இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்து எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்து வருவது மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களுக்காகத் தனித் தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது.
ஆனால் இந்தியாவில் முதன் முதலில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பதிவு செய்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கடைசியாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழிற்சாலையை அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மஹிந்திரா சென்னையில் மிகப்பெரிய கட்டமைப்பை வைத்துக்கொண்டு புதிய தலைமுறை எஸ்யூவி கார்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் புதிய தொழிற்சாலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 10000 கோடி ரூபாய் முதலீட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை எலக்ட்ரிக் வாகனங்களுக்காகப் பிரத்தியேகமாக அமைக்க உள்ளது. இந்த மாபெரும் தொழிற்சாலை மஹிந்திரா நிறுவனம் மகாராஷ்டிரா மாநில அரசின் தொழிற்துறை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அமைக்க உள்ளது.
10000 கோடி ரூபாய் முதலீடு
மஹிந்திரா & மஹிந்திரா (M&M) அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ள மஹிந்திராவின் வரவிருக்கும் Born Electric Vehicles (BEVs) உற்பத்தி, மேம்பாடு மற்றும் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்காக, மஹிந்திரா குழுமத்தின் அதன் துணை நிறுவனம் மூலம் அடுத்த 7-8 ஆண்டுகளில் தோராயமாக ரூ.10,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
INGLO EV பிளாட்ஃபார்ம்
மஹிந்திரா அடுத்து அறிமுகம் செய்ய உள்ள Born Electric Vehicles (BEVs) பிரிவில் வரும் எலக்ட்ரிக் கார்களை 15 ஆகஸ்ட் 2022 அன்று பிரிட்டன் நாட்டின் Oxfordshire இல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மஹிந்திரா தனது எலக்ட்ரிக் கார்கள் அனைத்தையும் INGLO EV பிளாட்ஃபார்ம்-ஐ அடிப்படையாக வைத்து e-SUV அதாவது எலக்ட்ரிக எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மகாராஷ்டிரா அரசு
INGLO EV பிளாட்ஃபார்ம் கீழ் மஹிந்திரா தனது முன்னணி மாடலான XUV காரை 'BE' என்ற பிரான்டின் கீழ் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. மகாராஷ்டிரா அரசு புனே-வில் எலக்ட்ரிக் வாகனங்களுக்காகப் புதிய தொழிற்சாலை அமைக்க மஹிந்திரா குழுமத்திற்கு ஒப்புதல் அளித்தது மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தாய் மாநிலம்
இதன் மூலம் மஹிந்திரா குழுமத்திற்குச் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் 'தாய்' மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்தற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆட்டோ மற்றும் பண்ணை துறைகளின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் கூறினார்.
மகாராஷ்டிரா
இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் ஹப் ஆக மகாராஷ்டிரா மாறியுள்ளது என மஹிந்திரா கூறியுள்ளது. இந்தியாவில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கப் புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
மாருதி சுசூகி
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி இந்தியாவில் 2025 முதல் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காகப் புதிதாக ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா-வில் நிறுவ உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையைச் சுசூகி தனியாகச் சொந்த முதலீட்டில் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர்-ல் அமைக்க உள்ளது.