பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளைக் கண் முன்னே அனைவரும் பார்த்து வரும் நிலையில் இனி எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பெரும் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் மட்டுமே செய்து வரும் நிலையில் இப்பிரிவு வர்த்தகத்தில் பிற நிறுவனங்களும் இறங்க தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வோக்ஸ்வேகன்
உலகின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் மற்றும் இந்தியாவின் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா மின்சார வாகனங்களில் ஜெர்மன் நிறுவனத்தின் உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா-வுக்கு இணையாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கான உதிரிப்பாகங்கள், பிளாட்பார்ம் மற்றும் தொழில்நுட்பத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பயன்படுத்தி இந்தியாவில் கார் தயாரிக்க முடியும்.
MEB பிளாட்பார்ம்
மஹிந்திரா தனது "பார்ன் எலக்ட்ரிக் பிளாட்ஃபார்ம்"க்கு ஃபோக்ஸ்வேகனின் MEB பிளாட்பார்மில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார்கள், பேட்டரி சிஸ்டம் பாகங்கள் மற்றும் பேட்டரி செல்கள் போன்ற பாகங்களைப் பயன்படுத்த முடிவு செய்து இதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதற்காக மாற்றத்தை செய்வதில் ரெடிமேட் ஆகக் கிடைக்கும் வோக்ஸ்வேகன் நிறுனத்தின் MEB பிளாட்பார்ம் பயன்படுத்துவதன் மூலம் அதிகளவிலான செலவுகளை மிச்சப்படுத்தி EV வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய முடியும்.
மஹிந்திரா - ஃபோர்டு
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, பல ஆண்டுகளாக அதன் சொந்த பிளாட்பார்ம்-ஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவின் ஃபோர்ட் உடனும் இப்பிரிவில் இணைந்து பணியாற்றியது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் இரு நிறுவனங்களும் தனித்தனியாகச் செல்ல முடிவு செய்தது பெரும் பின்னடைவாக அமைந்தது.
வோக்ஸ்வேகன் - டாடா மோட்டார்ஸ்
வோக்ஸ்வேகன் இதற்கிடையில், புதிய வாகனங்களை உருவாக்குவதற்கும் உற்பத்தி செய்வதற்குமான செலவைக் குறைக்க டாடா மோட்டார்ஸ் உடன் வாகனக் கட்டமைப்பு மற்றும் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கடைசியில் மஹிந்திரா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.