மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய இருக்கும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி (SUV) கார்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய ஆட்டொமொபைல் உற்பத்தி சந்தையாக விளங்கும் தமிழ்நாட்டில் மஹிந்திரா-வின் புதிய தொழிற்சாலை வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம் சென்னையில் ஏற்கனவே மஹிந்திராவின் முக்கியத் தொழில்நுட்ப கட்டமைப்புகள் உள்ளது.
5 புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்
டிசம்பர் 2024 மற்றும் 2026 மத்தியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 5 புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செயது விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் இக்கார்களின் உற்பத்திக்காகப் புதிய உற்பத்தி கட்டமைப்பை அமைக்க மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
உற்பத்தி தளம்
இப்புதிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உற்பத்தி தளத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து முடிவு செய்ய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை மதிப்பீடு செய்யும் பணியில் தற்போது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தற்போது ICE இன்ஜின் கொண்ட வாகனங்களை மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களான தொழிற்சாலையை எந்த மாநிலத்தில் அமைக்க உள்ளது, எந்தெந்த மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அனைத்தையும் ரகசியமாகவே வைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தற்போது டாடா மோட்டார்ஸ் முன்னணி நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் முதன் முதலில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்தது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தான்.
வோக்ஸ்வாகன் உடன் கூட்டணி
இந்நிலையில் தற்போது ஜெர்மன் நாட்டின் வோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் மஹிந்திரா குழுமம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கியப் பாகங்கள், கட்டமைப்புகளை வாங்கவும், பகிரவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கட்டமைப்பில் தான் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் BE என்ற பிராண்டில் அடுத்த 5 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது.