அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. இந்த விசாவை அதிகமாக பயன்படுத்தக்கூடிய நாடாக இந்தியா தான் இருக்கிறது.
ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்று வேலை செய்யக்கூடிய நபர்களில் 70% பேர் இந்தியாவை சேர்ந்த டெக் ஊழியர்களாக தான் இருக்கின்றனர். தற்போது கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்திருக்கும் சுந்தர் பிச்சை தொடங்கி அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்து வரக்கூடிய ஏராளமான இந்தியர்கள் h1b விசா மூலம் அமெரிக்கா சென்றவர்கள் தான். ஆனால் ஹெச்1பி விசாவை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதில்லை, இந்த விசாவை தவறாக பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு புதிய ஹெச்1பி விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் அதற்காக 1 லட்சம் அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் என ஒரு புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இதனால் ஹெச்1பி மூலம் ஊழியர்களை அமெரிக்காவிற்கு வரவழைப்பது டெக் நிறுவனங்களுக்கு அதிக செலவு மிக்கதாக மாறியது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்த தயங்கி வந்தன. இதனால் இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர்கள் மற்றும் டெக்கிகள் தங்களுடைய அமெரிக்க கனவு தகர்ந்து போனதாக உணர தொடங்கினர்.
டிரம்பின் இந்த அறிவிப்பை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அமெரிக்காவில் தனித்திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய ஹெச்1பி விசாக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் செல்லாது சட்ட விரோதமானது என கூறி டிரம்பின் உத்தரவை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வரிகளை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை இது பறிப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
விசா வழங்குவதற்காக வசூல் செய்யப்படக்கூடிய எந்த ஒரு கட்டணமும் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அந்த கட்டணத்தின் தன்மை அது ஒரு வரி என்பதையே காட்டுகிறது என தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர்கள் மற்றும் டெக்கிகள் அமெரிக்கா சென்று ஹெச்1பி விசாவில் வேலை செய்வது எளிமையானதாக மாறும். டெக் நிறுவனங்களுக்கும் இது ஒரு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.
இதற்கிடையே வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஹெச்1பி விசா பல்லாண்டு காலமாக அமெரிக்க டெக் நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிபர் டொனால்டு டிரம்ப் அந்த பிரச்சனையை சரி செய்வதற்காகவே இந்த கட்டண அறிவிப்பை வெளியிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசாங்கம் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications

