நாளை ஆகஸ்ட் 1 தொடங்கவுள்ள நிலையில் பற்பல மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதில் சிலிண்டர் முதல் வங்கி பரிவர்த்தனை வரை என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?
குறிப்பாக பாசிட்டிவ் பே சிஸ்டம் சில வங்கிகளில் அமலுக்கு வரவுள்ளது. இதனால் என்ன பலன்? வாருங்கள் பார்க்கலாம்.
எல்பிஜி?
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இது சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக நாளை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலக திட்டங்களுக்கான வட்டி விகிதம்
தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் கூட்டத்திலும் கட்டாயம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேமிப்புகளுக்காக முதலீடும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பல காலாண்டுகளாகவே வட்டி அதிகரிக்கப்படாமல் இருந்து வரும் நிலையில், வரவிருக்கும் நாட்களில் இது குறித்த மாற்றமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி தாக்கல்
இன்று வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிக்கும் திட்டம் இல்லை என அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இன்றுக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆகஸ்ட் 1 ல் இருந்து அபராதம் விதிக்கப்படலாம்.
பேங்க் ஆப் பரோடா
பேங்க் ஆப் பரோடா ஆகஸ்ட் 1 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை அமலுக்கு கொண்டு வரவுள்ளது. ஆக இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக பரிவர்த்தனை செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு பாசிட்டிவ் பே முறையானது செயல்படுத்தப்படும். இது அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கலாம்.
ஹெச் டி எஃப் சி அறிவிப்பு
ஹெச் டி எஃப் சி- யானது அதன் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட்டினை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக புதியதாக கடன் வாங்குவோர், ஏற்கனவே கடன் வாங்கியோர் என பலருகும் கூடுதலாக வட்டி செலுத்தும் நிலை ஏற்படலாம். இரண்டு மாதங்களில் ஹெச் டி எஃப் சி ஆல் செய்யப்படும் 5வது உயர்வு இதுவாகும். இந்த ஆண்டு மே மாதம் முதல் 115 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.