தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு நடைமுறைகள் அவ்வப்போது நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பத்திரப்பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
வழக்கமாக நாம் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும், சொத்து பத்திர பதிவு, பட்டா மாற்றம் என பல்வேறு சேவைகளையும் பெறுவதற்கு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். இதற்காக முன் கூட்டியே டோக்கன் பெற்று சட்ட ரீதியான ஆவணங்களை தயார் செய்து சார் பதிவாளர் அலுவலகம் சென்றால் நாள் முழுவதும் அதற்கே போய்விடும். அலுவலகத்திற்கு லீவு போட்டு நாள் முழுவதும் பத்திர பதிவு அலுவலகத்திலேயே கழிக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஆவணம் இல்லை அல்லது தகவல்களில் தவறு என ஒரு சிறு பிழை இருந்தால் கூட மீண்டூம் ஒரு நாள் இதற்காக செலவிட நேரிடும்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) முறையை அமல்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பத்திர பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணப்பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் அதாவது 24 மணி நேரமும் 365 நாட்களும் இணையதளத்தின் மூலம் தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆவணப்பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்ஸ்-அப் (Whatsapp) மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் லாகின் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எங்கிருந்தும் எப்போதும் ஆவணப்பதிவு என்பதை நடைமுறைப்படுத்த ஏதுவாக சில நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்வதற்கான ஆவணங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி
அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)
ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு(First sale of Flat)
இ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
ஈ) வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள்
ஆகியவை கட்டாயம் பதிவேற்றப்பட வேண்டும்.
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வழக்கறிஞர்கள்
1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது லாகினில் தாங்களே மேற்படி ஆவணங்களை (இரசீது) இணையவழியில் உருவாக்கி சமர்ப்பிக்கலாம்.
2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யவேண்டும்.
3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழியாக ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஆன்லைனிலேயே பத்திர பதிவை முடிக்க இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி,புகைப்படக் கருவி (Webcam) ஆகியவை இருந்தால் போதும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

