இந்தியாவில் தற்போது வாகன உற்பத்தி மற்றும் மின்னனு சாதனங்கள் , புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தேவைப்படக்கூடிய அரிய வகை காந்தங்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகம் முழுவதுமே இந்த அரியவகை காந்தங்கள் உற்பத்தியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பல்வேறு நாடுகளை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களும் அரிய வகை காந்தங்களுக்கு சீனாவை தான் சார்ந்து இருக்கின்றன. சீனாவில் இந்த காந்தங்கள் அதிகமாக இருக்கிறது என்பதோடு மட்டும் இல்லாமல் அவற்றை பிரித்து எடுப்பதற்கான தொழில் நுட்பத்திலும் சீனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்னர் சீனா தங்கள் நாட்டில் இருந்து அரிய வகை காந்தங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இது இந்தியாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் அளவிற்கு பாதிப்புகளை உண்டாக்கியது. மத்திய அரசு இதற்கு மாற்று வழிமுறையை உருவாக்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் கேட்டு கொண்டன.
இந்த சூழலில் தான் மத்திய அரசு நாட்டில் அரிய வகை காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க 7 ,280 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு அனுமதி தந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் அரியவகை காந்தங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு மற்றும் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பொருட்களில் முக்கியமாக பயன்படுத்தப்படுபவை தான் அரிய வகை காந்தங்கள். இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும் எனவே நாம் தொடர்ச்சியாக இதற்காக இறக்குமதியையே சார்ந்து இருப்பது சரியாக இருக்காது என கருதி தான் மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது .
இந்த திட்டத்தின் கீழ் ஏல நடைமுறையில் ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக ஆண்டுக்கு 1200 டன் உற்பத்தி திறன் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு பின் ஆலை அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகள் விற்பனை சார்ந்த ஊக்கத்தொகைக்கு 5 ஆண்டுகள் என மொத்தம் ஏழு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்நாட்டில் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு மட்டும் இல்லாமல் அரிய வகை காந்தங்களின் தேவைக்காக நாம் சீனா போன்ற நாடுகளை சார்ந்து இல்லாமல் தற்சார்பு நிலையை எட்ட முடியும்.


Click it and Unblock the Notifications