அண்மை காலமாக போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மாம்பழங்களை குப்பையில் வீசி செல்கின்றனர் என்ற செய்தியை அதிகமாக காண முடிகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு பின்னர் பல கோடி ரூபாய் பிஸ்னஸ் இருக்கிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் தான் இந்தியாவின் மிகப்பெரிய மாம்பழக் கூழ் (Mango Pulp) தயாரிக்கும் தொழிற்சாலைகள் குவிந்துள்ளன. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் விளைவிக்கப்படும் 80% மாம்பழங்கள் சித்தூரில் உள்ள மாம்பழக் கூழ் ஆலைகளுக்கு தான் அனுப்பப்பட்டு வந்தன. ஏனெனில் இங்கே விளையும் தோட்டாபுரி மாம்பழம் தான் அதிக சுவையும் அதிக மாம்பழக் கூழையும் தரக்கூடியது. ஆனால் இதில் தான் பெரிய சிக்கலே ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆந்திர அரசு தங்களின் உள்ளூர் தோட்டாபுரி மாம்பழ விவசாயிகளைப் பாதுகாக்க, ஒரு கிலோ மாம்பழத்திற்கு 8 ரூபாய் கொள்முதல் விலை மற்றும் 4 ரூபாய் அரசு மானியம் என மொத்தம் 12 ரூபாய் கிடைக்கும்படி விலை நிர்ணயம் செய்தது. அதே நேரத்தில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு (கிருஷ்ணகிரி, தருமபுரி) மற்றும் கர்நாடகாவில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்ததால், அங்கு சந்தை விலை கிலோ 5 முதல் 6 ரூபாய் வரை சரிந்தது.
இதனால் சித்தூரில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளூர் ஆந்திர விவசாயிகளிடம் 12 ரூபாய்க்கு வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, மலிவாகக் கிடைக்கும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாம்பழங்களை வாங்கத் தொடங்கின. இதனால் ஆந்திர விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவானது. இதன் காரணமாக ஆந்திராவின் சித்தூர் மாவட்ட நிர்வாகம் எல்லையில் சிறப்புச் சோதனைச் சாவடிகளை அமைத்து, வெளிமாநில (தமிழ்நாடு, கர்நாடகா) தோட்டாபுரி மாம்பழ லாரிகள் உள்ளே நுழைய அதிரடித் தடை விதித்தது.
இந்த ஆண்டு அதிக மாம்பழம் விளைந்தும் அவற்றை சித்தூர் ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தங்களின் முதன்மைச் சந்தையான சித்தூர் தொழிற்சாலைகளுக்கு மாம்பழங்களை அனுப்ப முடியாமல் கிருஷ்ணகிரி மாவட்ட லாரிகள் எல்லையிலேயே முடங்கின. உள்ளூர் வியாபாரிகளும், சில மாங்கூழ் தொழிற்சாலைகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, விவசாயிகளிடம் ஒரு கிலோ மாம்பழத்தை வெறும் 2 ரூபாய் மட்டுமே கேட்கின்றன.

மாம்பழங்களை சாகுபடி செய்ய ஆள் கூலி, பெட்டிகள் (Crates) வாங்கும் செலவு, மற்றும் வண்டி வாடகை ஆகியவற்றைத் சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஆனால், சந்தையில் 2 ரூபாய் மட்டுமே விலை கிடைப்பதால், பழங்களை விற்றால் விவசாயிகளுக்குக் கூடுதல் நஷ்டமே மிஞ்சுகிறது. மாம்பழங்கள் விரைவில் அழுகக்கூடியவை என்பதாலும், உள்ளூரில் போதிய குளிர்சாதனக் கிடங்குகள் இல்லாததாலும் விரக்தியடைந்த விவசாயிகள், தங்களின் பல மாத உழைப்பைச் சாலையோரங்களிலும் குப்பைகளிலும் கொட்டிப் போராடி வருகின்றனர்.
இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து தங்களை காக்க, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் போல, தமிழக அரசே நேரடியாக மாம்பழக் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, விவசாயிகளிடம் இருந்து தோட்டாபுரி மாம்பழத்தை குறைந்தது ₹15 முதல் ₹20 வரை வாங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆந்திர மாநிலத் தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்ற, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் முக்கிய ஒன்றியங்களில் அரசு சார்பிலேயே கூட்டுறவு மாங்கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும், பழங்கள் அழுகிப் போவதைத் தடுக்க கிராம பஞ்சாயத்து அளவில் சூரிய சக்தியால் இயங்கும் நவீன குளிர்சாதனக் கிடங்குகளை (Solar Cold Storage) அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஆந்திர அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக தமிழக மாம்பழங்களை கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

