இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆன்லைன் விற்பனை மூலம் பெரும் பெரும் புரட்சியைச் செய்த சியோமி நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் இந்திய சந்தை தலைவர் பதவியில் இருந்து சர்வதேசச் சந்தை வர்த்தகத்தில் முக்கியப் பொறுப்பைச் சில மாதங்களுக்கு முன்பு தான் பதிவி உயர்வு பெற்றார்.
இவர் இந்திய வர்த்தகப் பொறுப்பில் இருந்து வெளியேறிய நாளில் இருந்து பல வர்த்தகத் தடுமாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் உருவானது மட்டும் அல்லாமல் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு நிதி மோசடிகள் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மனு குமார் ஜெயின் தற்போது சியோமி நிறுவனத்தின் வர்த்தகத்தில் இருந்து மொத்தமாக வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார்.
சியோமி
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி-யின் இந்தியா பிரிவின் முன்னாள் தலைவரும் தற்போது சர்வதேச வர்த்தகத்தின் துணை தலைவராக இருக்கும் மனு குமார் ஜெயின் சுமார் ஒன்பது வருடம் Xiaomi குழுமத்தில் பணியாற்றிவிட்டுத் தற்போது மொத்தமாக விலகியுள்ளார்.
மனு குமார் ஜெயின்
மனு குமார் ஜெயின் லின்கிடுஇன் தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், சியோமி நிறுவனத்தை விட்டு 9 ஆண்டுகளுக்குப் பின்பு வெளியேறுவது குறித்து முக்கியமான பதிவை வெளியிட்டு உள்ளார்.
ஸ்டார்ட்அப்
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மற்றொரு நிறைவான சவாலை எதிர்கொள்ளும் நிறுவனத்துடன் மீண்டும் வருவதற்குள் சிறிய ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் மனுகுமார் ஜெயின் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் நுழைய உள்ளார்.
ஒன்பது ஆண்டுகள்
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சியோமி குழுமத்திலிருந்து வெளியேறுகிறேன். உலகெங்கிலும் வலுவான தலைமை நிர்வாகக் குழுக்கள் இருப்பதால், நிறுவனத்தை விட்டு வெளியேற சரியான நேரம் என்று நான் நம்புகிறேன் என்று மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
துபாய்
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய தலைவர் பதவியை விடுத்து துபாய்க்குச் சென்று உத்திகள் மற்றும் வளர்ச்சியைக் கவனிக்கும் சியோமி சர்வதேச துணைத் தலைவராகப் பணியாற்றத் துவங்கினார். தற்போது மொத்தமாக நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.
முகேஷ் அம்பானி
மனு குமார் ஜெயின் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பல முக்கியமான விஷயங்களைக் கற்றதாகவும், இந்தச் சந்திப்புக்கு மிகவும் நன்றி எனவும் தெரிவித்தார்.
ரிலையன்ஸ், டாடா
இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மனு குமார் ஜெயின் சேர வாய்ப்பு உள்ளது. இதேவேளையில் டாடா நியூ தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது.
ஆனால் மனு குமார் ஜெயின் இந்தியா ஸ்டார்ட்அப் துறையில் இறங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.