இந்தியாவின் வளர்ச்சியானது கடந்த ஜூன் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டே கடுமையான பொருளாதார மந்த நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், தற்போது கொரோனாவால் அதனை விட பல மடங்கு பாதித்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டில் உலகம் கடுமையான பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்ட நிலையில், அப்போது ஜிடிபி விகிதம் 18 சதவீதமாக சரிந்தது. இந்த நிலையில் அதன் பின்னர் தற்போது தான் 23.9 சதவீதம் சரிந்துள்ளது.
எந்தெந்த துறைகள் வீழ்ச்சி
இதற்கிடையில் விவசாயம் தவிர மற்ற அனைத்து முக்கியத் துறைகளும் பலத்த அடி வாங்கியுள்ளன. குறிப்பாக கட்டுமானத் துறை 50.3% வீழ்ச்சியும், இதுவே உற்பத்தி துறை 39.3% வீழ்ச்சியும், இதே வர்த்தகம், ஹோட்டல், தகவல் தொடர்பு துறை, போக்குவரத்து மற்றும் ஒளிப்பரப்பு தொடர்பான துறைகள் சுமார் 47% வீழ்ச்சி கண்டுள்ளன.
பொருளாதாரம் நிலை நிறுத்தப்படவில்லை
கடந்த 2019 -20ம் நிதியாண்டின் இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.2% அதிகரித்திருந்தது. இதே ஜனவரி - மார்ச் 2020 காலாண்டில் ஜிடிபி 3.1% மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. இதே பெரும்பாலான குறிக்காட்டிகள் ஜூன் மாதத்தில் வளர்ச்சி பாதையில் இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அவை மீண்டும் குறைந்துவிட்டன. இது பொருளாதாரம் இன்னும் நிலை நிறுத்தப்படவில்லை என்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.
உற்பத்தி துறை சரிவு
ஏனெனில் மின்சார பயன்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வினைக் கொண்டு ஓரளவுக்கு, தொழில்துறை உற்பத்தியில் மீட்பு எவ்வாறு உள்ளது என்பதனை கணித்து விடலாம். ஆனால் அவற்றின் பயன்பாடு முன்பை விட மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.
மேலும் பலவீனமான முதலீடு, மூலதன செலவு மற்றும் நுகர்வு, தேவை ஆகியவை தொடர்ந்து எதிர்மறையாகவே இருந்து வருகின்றன. எனினும் இந்த பெருந்தொற்றின் காரணமாக தரவு சேகரிப்பும் பாதிக்கப்பட்டது.
தேவை குறைவு
கடந்த மார்ச் இறுதியில் இருந்தே தொற்று நோய் பரவுவதை தடுப்பதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் அத்தியாவசியம் தவிர, மற்ற அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த காலத்தில் தேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. நுகர்வும் வெகுவாக குறைந்தது.
வேலை இழப்புகள்
CMIE அறிக்கையின் படி, லாக்டவுன் காலத்தில் சம்பள வேலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் மொத்த இழப்புகள் 18.9 மில்லியனாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக வேலையிழந்தவர்கள் அடிப்படை தேவைக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. இதுவும் தேவை குறைய ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஜி20 நாடுகளிலேயே மிக மோசம்
கடந்த 69 ஆண்டுகளில் இந்தியா மூன்று ரெசசன்களை கண்டுள்ளது. அது 1958, 1966 மற்றும் 1980ம் நிதியாண்டுகள் தான். ஆனால் இந்த மூன்று முறைக்குமே ஒரே காரணம் தான். மோசமான பருவத்தினால் விவசாயம் பாதிப்பு, இதனால் பொருளாதாரம் பாதிப்பு என இருந்துள்ளது. ஆனால் தற்போது வந்துள்ளது வேறு. மாறாக இந்த காலகட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் மட்டுமே ஜூன் காலாண்டில் வளர்ச்சியினைக் கண்டுள்ளன. ஜூன் காலாண்டில் ஏற்பட்ட இந்த மோசமான சரிவினால், ஜி20 நாடுகளில் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.
சரிவில் தொழில் துறை குறியீடுகள்
தொழில்துறை உற்பத்தி குறியீடு, பிஎம்ஐ உற்பத்தி குறித்தான குறியீடு, ஆட்டோமொபைல் விற்பனை உள்ளிட்ட பல குறியீடுகள் ஜூன் காலாண்டில் கடுமையான சரிவினைக் கண்டன. ஏப்ரல் -ஜூன் மாதத்தில் ஐஐபி சராசரியாக 36% சுருங்கியது. இதே வணிக வாகன விற்பனை 84.8% சரிவினைக் கண்டுள்ளது.
கட்டுமானத் துறை வளர்ச்சி முக்கியம்
இதற்கிடையில் கட்டுமானத் துறையும் தனது வளர்ச்சியினைக் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகரிக்கும் மொத்த வேலை விகிதங்களில் நான்கில் ஒன்று இதில் சேர்க்கப்படலாம். மேலும் பெரிய பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பது, பொருளாதாரத்திற்கு ஒரு உத்வேகத்தினை அளிக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பொது செலவினங்கள் அதிகரிக்க வேண்டும்
KPMG அறிக்கையின் படி. உள்கட்டமைப்பு செலவினங்கள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் எதிரொலிக்கலாம். இதே கெயினீசியன் கோட்பாட்டின் அடிப்படையில், பொது செலவினங்கள் அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த தேவையையும் மீண்டும் அதிகரிக்க முடியும். இதன் மூலம் வளர்ச்சியினை காண முடியும்.
லாக்டவுனுக்கு முன்பே சரியாக செயல்படவில்லை
இதே மற்றொரு அறிக்கையின் படி, அடுத்த தசாப்தத்தில் இந்தியா 90 மில்லியன் பண்ணை அல்லாத வேலைகளை உருவாக்க வேண்டும். இது ஒட்டுமொத்த ஜிடிபியில் 8 - 8.5% பங்கினை வழங்ககூடிய திறனை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும். எனினும் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறை லாக்டவுனுக்கு முன்பே சிறப்பாக செயல்படவில்லை. இதுவும் கடுமையான சரிவுக்கு ஒரு காரணம் எனலாம்.
முதலீட்டு வளர்ச்சி
கடந்த 50 ஆண்டுகளில் முதலீட்டு வளர்ச்சியில் சுமார் 40% என்பது கட்டுமான துறையாகும். நாட்டில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சுமார் 16% பேர் கட்டுமானத்தினையே சார்ந்துள்ளனர். இது நாட்டின் மொத்த ஜிடிபி விகிதத்தில் 5% பங்களிக்கிறது.
உற்பத்தி & சேவைத் துறையின் பங்கு
இதுவே உற்பத்தி துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 - 17% பங்களிக்கிறது. மேலும் இது நாட்டின் 12% தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது. உற்பத்தி துறையில் உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலையும் சேவைத் துறையில் 2 - 3 வேலைகளையும் உருவாக்குகிறது என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.