டெல்லி: பெரும் கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தினை மீட்டெடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைத்ததோடு, இந்த திட்டத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு மறுமலர்ச்சிக்காக 69,000 கோடி ரூபாய் நிதி கொடுப்பதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இந்த மறுமலர்ச்சி திட்டத்தில் இரு நிறுவனங்களையும் இணைத்தல், அவர்களின் சொத்துகளை பணமாக்குதல், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குதல் உள்ளிட்டவை இந்த மறுமலர்ச்சி திட்டத்தில் அடங்கும்.
கைகொடுத்த விஆர்எஸ்
மேற்கூறிய இந்த மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் விஆர்எஸ் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் 78,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பட்டனர். இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன. எனினும் இதுவரையில் மற்ற மறுமலர்ச்சி திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
4ஜி சேவை
தனியார் நிறுவனங்கள் கூட 4ஜி சேவை வழங்கி வரும் நிலையில், அரசு பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜிக்கு சேவைக்கு மாறவில்லை என்பது அரசு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தினை மேம்படுத்தவும், சீரமைக்கும் பொருட்டு நிதி திரட்டவும், அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லின் பல சொத்துக்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.
சொத்து விற்பனை திட்டம்
சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை இந்த நிறுவனத்தின் சீரமைப்பு முதலீட்டுக்காக முதலீடு செய்ய முடியும் என்றும், இதனால் சொத்து விற்பனை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது. மேலும் இந்த நிறுவனத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு சொத்துக்களை விற்க தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த நிதியாண்டில் சொத்துகள் விற்பனை
இப்படி ஒரு நிலையில் தான் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சொத்துகள் விற்பனை அடுத்த நிதியாண்டில் நிறைவு பெறலாம் என கூறப்படுகிறது. இந்த விற்பனைக்காக இந்த நிறுவனங்களின் சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றது. கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு 69,000 கோடி ரூபாய் அளவிலான நிதியினை ஒதுக்கீடு செய்தது. இதில் மூலதன செலவு 20,140 கோடி ரூபாயும் அடங்கும். அதோடு ஜிஎஸ்டி நிலுவை 3,674 கோடி ரூபாயினையும் அரசே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
தொடர் நஷ்டம்
இது தவிர இன்னும் பல திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்தது. அதோடு 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நான்கு ஆண்டுகளில் பணமாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ச்சியாக நஷ்டத்தினை கண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.