அமெரிக்கா, சிங்கப்பூர், அரபு நாடுகள், பிரிட்டன் என பல நாடுகளில் நம் இந்தியர்கள் வேலை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களது வேலைகளை இழந்து வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர்.
இதே பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
வெளி நாடுகளில் சிக்கித் தவிப்பு
இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டாலும், இன்னும் பல ஆயிரம் பேர் வெளி நாடுகளில் ஆங்காங்ககே சிக்கித் தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் தங்களை காப்பாற்றுமாறு பதிவிட்டு வருவதை காண முடிகிறது. இன்னும் பலர் தங்களது அரசின் உதவியை நாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அனுமதி கோரி விண்ணப்பம்
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
UAE வேலை தேடும் இந்தியர்கள்
இந்த நிலையில். லைவ் மிண்டில் வெளியான ஒரு செய்தியில் கொரோனா வைரஸினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளினால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடி சென்றவர்கள், சரியான வேலையும் கிடைக்காமல், தற்போது கையிலிருக்கும் காசும் கரைந்து போயுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கும் வழி இல்லாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கையில் இருக்கும் காசு இன்னும் எவ்வளவு நாளுக்கு வரும்
இன்னும் சிலர் தங்களது விசா காலம் முடிவடைந்து விட்டதாகவும், ஆனால் இன்னும் அங்கேயே இருப்பதாகவும், இதனால் தாங்கள் இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இதே ஓமனில் பணிபுரியும் சில இந்திய இளைஞர்கள் தாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த கேண்டீங்கள் கூட மூடப்பட்டு விட்டன. கையில் இருக்கும் சிறிது காசினை வைத்து இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஓட்ட முடியும் என தெரியவில்லை. செய்து வரும் வேலையும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீட்டிக்கும் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அரசின் உதவியை நாடல்
கிட்டதட்ட 250 பேருக்கும் மேல் தாங்கள் இருக்கும் ஏரியாவில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அரசிடம் உதவி கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இப்படி தெரிந்தும் தெரியாமலும் இன்னும் எத்தனை எத்தனை ஊழியர்களும், குடும்பங்களும் அண்டை நாடுகளில் தவித்து வருகின்றனவோ தெரியவில்லை. விரைவில் அவர்கள் நலமுடன் வீடு திரும்ப நாமும் பிரார்திப்போம்.