உலகின் மிகப்பெரிய கண்ணாடி உற்பத்தியாளரும், பல பிரபலமான கூலிங்கிளாஸ் பிராண்டுகளை மொத்தமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் எசிலார்லக்ஸாட்டிக்கா ( EssilorLuxottica) நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதற்காக சமூகவலைத்தள நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை எசிலார்லக்ஸாட்டிக்கா எஸ்ஏ நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க டெக் நிறுவனமான மெட்டா, ஸ்மார்ட் கண்ணாடிகளில் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனம் தான் மெட்டா.

எசிலார்லக்ஸாட்டிக்கா மற்றும் மெட்டா கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் கண்ணாடி தயாரிப்பதில் இணைந்து பணியாற்றி வருகிறது. 2021 ஆம் ஆண்டில், கூலிங்கிளாஸ் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, மியசிக் கேட்டு, போன்கால் பேசும் வகையில், வேஃபேரர் பிரேமில் தனது முதல் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை மெட்டா வெளியிட்டது.
இது மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு பெற்றாலும், அதிகப்படியான விலையின் காரணமாக விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. ஆனாலும் இதில் பல புதிய அப்டேட்களை மெட்டா கொண்டு வர முடிவு செய்து, புதிய கண்ணாடிகள் மெட்டா ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு சேவையை இதனுடன் இணைத்துள்ளது.
எசிலார்லக்ஸாட்டிக்காவுடனான ஒப்பந்தம், ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான விர்ச்சுவல் மற்றும் ஆகுமென்டெட் சந்தையில் மெட்டாவின் அடுத்தகட்ட நகர்வைக் குறிக்கிறது. அதே நேரத்தில், இந்த பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து EssilorLuxottica புதிய சந்தைகளில் நுழைவது, புதிய டிசைன், புதிய முதலீடுகள் செய்வதற்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில் EssilorLuxottica-வின் சிஇஓ பிரான்செஸ்கோ மில்லெரி, மெட்டாவின் முதலீட்டு திட்டங்கள் குறித்து உறுதியளித்தார். இதன் வாயிலாக எசிலார்லக்ஸாட்டிக்கா பங்குகள் பாரிஸ் பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை 8.1% வரை உயர்ந்தன. இது இரண்டு ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச உயர்வு ஆகும்.


Click it and Unblock the Notifications