கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது ஒரு புறம் இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாகவே இருந்தது. குறிப்பாக பல புதிய டெக் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்கு சந்தைக்குள் நுழைந்தன.
இது ஆரம்பத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், நடப்பு ஆண்டில் பலரும் ஏமாற்றம் கண்டுள்ளனர் என்றே கூறலாம்.
ஏனெனில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதனால் சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
டெக் நிறுவனங்கள் சரிவு
குறிப்பாக சோமோட்டோ, பேடிஎம், பிபி பின்டெக்., கார்டிரேடு, நய்கா, பினோ பேமேண்ட்ஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் நடப்பு ஆண்டில், ஐபிஓ விலையில் இருந்து சரிவில் காணப்படுகின்றன. இவை பொது பங்கு வெளியீட்டில் இருந்து 50% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இந்த பட்டியலில் சோமோட்டோ பங்கானது ஆரம்பத்தில் இருந்து நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களாக நல்ல ஏற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
80 - 90% வீழ்ச்சி காணலாம்
இந்த பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், இன்னும் சரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக 2022ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த பங்குகள் 80 - 90% நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏன் வீழ்ச்சி?
சந்தையில் பல நிறுவனங்களின் பங்குகளும் பிரீமிய விலையில் இருந்தன. இதன் காரணமாக இந்த சரிவு இருக்கலாம். சில நிறுவனங்களில் எதிர்பார்க்காத அளவு முதலீடுகள் குவிந்தன. இது அதன் மதிப்பீடுகளுக்கு மேலான முதலீடுகளாக உள்ளன. இவற்றின் வணிக மாதிரிகள் யோசிக்க வேண்டியவையாக உள்ளன. சில நிறுவனங்களில் எந்த தனித் தன்மையும் இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே சில நிறுவனங்கள் 20 - 50% வீழ்ச்சி கண்டுள்ளன. இது இன்னும் கூட 50% மேலாக வீழ்ச்சி காணலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலீடுகள் வெளியேற்றம்
எனினும் மற்ற வளர்ந்து வரும் சந்தைகளை விட, இந்திய சந்தையானது பரவாயில்லை. நடப்பு ஆண்டிலும் இது சிறப்பாக செயல்படலாம், எனினும் ஜனவரி மாதத்தில் இதுவரையில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. எனினும் தனி நபர் முதலீடுகள், சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். எல்லவற்றோடும் நடப்பு ஆண்டில் மியூச்சுவல் ஃபண்டுகளில் 10000 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடுகள் குவிந்துள்ளன. பார்மா மற்றும் கெமிக்கல் பங்குகள் மலிவான பங்குகளாக உள்ளன. வாங்க சிறந்த பங்குகளாகவும் பார்க்கப்படுகின்றன.
இன்றைய சந்தை நிலவரம்?
இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய நிலையில், முடிவிலும் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 1545.67 புள்ளிகளாக அல்லது 2.63% வீழ்ச்சி கண்டு, 57,491.51 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 468.05 புள்ளிகள் அல்லது 2.66% வீழ்ச்சி கண்டு, 17,149.10 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இது முன்னதாக கிட்டதட்ட 2000 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் வீழ்ச்சி கண்டு, சற்றே மீண்டுள்ளது.