இந்திய ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மாருதி சுசூகி புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் கார் உற்பத்தியை பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் துவங்கியுள்ள நிலையில் மாருதி சசூகி மட்டும் எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய முதலீட்டில் உருவாக்கப்படும் புதிய தொழிற்சாலை எலக்ட்ரிக் வாகனங்களுக்கானதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாருதி சுசூகி-யின் புதிய தொழிற்சாலை எந்த ஊரில் தெரியுமா..?!
மாருதி சுசூகி
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா தனது புதிய உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா மாநிலத்தில் சோனிபட் மாவட்டத்தில் ரூ. 18,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பெரிய முதலீடு
இந்தியாவில் எந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனமும் இவ்வளவு பெரிய முதலீட்டை செய்தது இல்லை என்பதால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மாருதி சுசூகியின் அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
சுசூகி மோட்டார்சைக்கிள்
இதோடு சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இதே ஹரியானா மாநிலத்தில் சோனிபட் மாவட்டத்தில் மற்றொரு இரு சக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1,466 கோடியை முதலீட்டில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
13,000 பேருக்கு வேலைவாய்ப்பு
இவ்விரு தொழிற்சாலையும் முழுத் திறனில் முழுமையாக இயங்க துவங்கினால் சுமார் 13,000 பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறை 2021ஆம் ஆண்டில் ஜெர்மனியை பின்னுக்குத்தள்ளி உலகின் 4வது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
19500 கோடி ரூபாய் முதலீடு
இந்த நிலையில் மாருதி சுசூகி மற்றும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் 19500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக உள்ள இரு தொழிற்சாலைக்கு ஹரியானா மாநில அரசு சோனிபட் மாவட்டத்தில் கார்கோடா என்னும் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
4வது தொழிற்சாலை
கார்கோடா பகுதியில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலை மாருதி சுசூகி நிறுவனத்தின் 4வது தொழிற்சாலையாகும். கூர்கானியில் 300 ஏக்கரில் தொழிற்சாலையும், மனேசர் 600 ஏக்கரில் தொழிற்சாலையும், ரோஹ்தக் 600 ஏக்கரில் தொழிற்சாலையும் வைத்துள்ளது மாருதி சுசூகி.