மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், காமராஜர் போர்ட் லிமிடெட் உடன் சர்வதேச சந்தைகளுக்கான கார்களை ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை துறைமுகத்திற்கு அருகில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ASEAN, ஓசியானியா மற்றும் சார்க் பகுதிகளில் இருக்கும் நாடுகளுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்ய உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு 20,000 கார்களை இத்துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யும் என்று மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி இந்தியா இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு உள்ளது. உற்பத்தி, விற்பனை, வேலைவாய்ப்பு, வாடிக்கையாளர் நம்பிக்கை என அனைத்து விஷயத்திலும் மாருதி சுசூகி தான் இந்திய ஆட்டோமொபைல் துறையில் நம்பர் ஓன்.
எலக்ட்ரிக் கார்
இந்த நிலையில் மாருதி சுசூகி தனது வெளிநாட்டு வர்த்தகக்தை விரிவாக்கம் செய்யவும், இனி வரும் காலகட்டத்தில் புதிதாகத் துவங்க உள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை இதன் மூலம் உருவாக்கும் வரையில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகப் புதிய ஒப்பந்தத்தைச் சென்னையில் இருக்கும் காமராஜர் போர்ட் லிமிடெட் உடன் செய்துள்ளது.
மேக் இன் இந்தியா
மத்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் மாருதி சுசூகி செயல்பட்டு வருகிறது. மேலும் நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட ஏற்றுமதி செயல்பாடுகள், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கார்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மூலம் அதன் எதிர்கால உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
காமராஜர் போர்ட் லிமிடெட்
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், காமராஜர் போர்ட் லிமிடெட் உடன் சர்வதேச சந்தைகளுக்கான கார்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் டிசம்பர் 2022 முதல் தொடங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுக் காலத்திற்கானது.
சென்னை துறைமுகம்
ஆட்டோமொபைல் ஏற்றுமதியை ஈர்க்கவும், எளிதாக்கும் வகையில், சென்னையில் இருக்கும் காமராஜர் போர்ட் லிமிடெட் கார்-கம்-ஜெனரல் கார்கோ பெர்த் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதை மிகவும் சரியான முறையில் மாருதி சுசூகி பயன்படுத்தியுள்ளது.
ஹைப்ரிட் கார்கள்
மாருதி சுசூகி இந்தியா வளர்ந்து வரும் சந்தைக்கு ஏற்ப ஹைப்ரிட் கார்கள், எலக்ட்ரிக் கார்கள் என மிட் ரேஞ்ச் ப்ரீமியம் கார்களை அறிமுகம் செய்யவும், தயாரிக்கவும் தயாராக உள்ளது. இதன் முதல் படியாகக் கிரான்ட் விட்டாரா கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டர் நிறுவனம்
ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் இடையேயான கூட்டாணி ஒரு பகுதியாக, மாருதி சுசூகி தனது கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் காரை கர்நாடகாவில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டர் நிறுவனத்தின் பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
காமராஜர் துறைமுகம்
இந்த நிலையில் மாருதி சுசூகி இனி வரும் காலகட்டத்தில் உள்நாட்டு விற்பனைக்கு இணையாக ஏற்றுமதி வர்த்தகத்தின் மீது அதிகப்படியான கவனத்தைச் செலுத்த உள்ளது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் காமராஜர் துறைமுகத்தில் உள்ள pre-delivery inspection மையத்திற்கு அனுப்பப்பட்டுப் பின்னர் ஏற்றுமதி செய்யப்படும்.
14,000 கார்கள் நிறுத்தும் வசதி
இந்தியாவின் 12 வது பெரிய துறைமுகம் என்று பெயர் பெற்றுள்ள சென்னை காமராஜர் போர்ட் லிமிடெட் துறைமுகத்தில் சுமார் 14,000 கார்களை நிறுத்தும் திறன் கொண்டது. இதோடு கார்-கம்-ஜெனரல் கார்கோ பெர்த் மூலம் வேகமாக ஏற்றுமதியை இயக்க முடியும்.