டெல்லி: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, கடந்த வாரத்தில் தான் மனோசர் ஆலையில் உற்பத்தியை தொடங்கியது எனலாம்.
ஆனால் அங்கு உற்பத்தி தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே கொரோனா பாதிப்பு ஒருவருக்கு இருப்பது சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருடன் தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் மற்ற ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
கடந்த வெள்ளிக்கிழமையன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிலாளர் கடைசியாக மே 15 அன்று பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது அவரது குடியிருப்பு பகுதி கட்டுப்பாட்டு மண்டலத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு வரை பணியில் இருந்துள்ளார்.
கடந்த வாரத்தில் தான் உற்பத்தி தொடக்கம்
கடந்த பல வாரங்களாக மானேசர் ஆலை கொரோனா பாதிப்பு காரணமாகவும், நாடு தழுவிய லாக்டவுன் காரணமாகவும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தான் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மீண்டும் பல கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது மாருதி சுசூகி.
உற்பத்தியை பாதிக்கும்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது தான் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு மாருதி சுசூகி ஊழியருக்கு தொற்றிக் கொண்டுள்ளதால், மீண்டும் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி மானேசர் குருகிராம் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி செய்து வருகிறது.
பின்னடைவாக அமையக்கூடும்
தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மானேசர் ஆலையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர், செலிரியோ போன்ற வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மாருதி சுசூகி நிறுவனம் பயணிகள் வாகன விற்பனை சந்தையில் 50 சதவீத பங்கினை கொண்டுள்ள நிலையில், இனி உற்பத்தி என்னவாகுமோ, ஏற்கனவே விற்பனை சரிவால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் மாருதிக்கு, இது மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.