இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் மாருதி சுசூகி 2021-22ஆம் நிதியாண்டில் ஏற்கனவே 3 முறை விலையை உயர்த்தியுள்ள நிலையில், 4வது விலை உயர்வை இன்று அமலாக்கம் செய்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை என்ற வீதத்தில் மாருதி சுசூகி வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுமோ என்ற கவலை இல்லாமல் தொடர்ந்து வாகனங்களின் விலையை உயர்த்தி வருகிறது.
மாருதி சுசூகி இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மட்டும் அல்லாமல் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்திற்கு அனைத்து மட்டத்திலும் வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் கொண்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்கும் இந்நிறுவனத்தின் மீது தனி மதிப்பு உண்டு.
மாருதி சுசூகி
இந்தச் சூழ்நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் சனிக்கிழமை தனது 4வது விலை உயர்வை அமலாக்கம் செய்துள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் அனைத்து கார்களின் விலையும் சுமார் 1.7 சதவீதம் வரையில் உயர உள்ளது. உதாரணமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் விலை 17,000 ரூபாய் அதிகரிக்க உள்ளது.
4 முறை விலை உயர்வு
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுசூகி கார்களின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் 1.6% மற்றும் செப்டம்பரில் 1.9% உயர்ந்துள்ளன. ஜூலை மாதம், நிறுவனம் அதன் பிரபலமான மாடல் ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி பொருத்தப்பட்ட அனைத்து மாடல்களின் விலையையும் ரூ.15,000 வரை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தற்போது 4வது முறையாக விலையை உயர்த்தியுள்ளது.
வர்த்தக ஆதிக்கம்
இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு இரண்டு கார்களிலும் ஒன்று மாருதி சுசூகி நிறுவனத்துடைய கார்கள் தான், பொதுவாக ஒரு கார் நிறுவனம் விலையை உயர்த்தினால் மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தும். இந்த நிலையில் பிற நிறுவனங்களும் அடுத்தச் சில வாரங்களில் விலை உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலோகங்கள், சிப்
கடந்த ஆண்டில் உலோகங்கள், சிப், உதிரிப்பாகங்களின் விலை உயர்வின் காரணமாகக் கார் உற்பத்தியாளர்களின் லாப அளவீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதை ஈடுகட்டவே மாருதி சுசூகி நிறுவனம் ஒரே வருடத்தில் 4 முறை விலையை உயர்த்தியுள்ளது.