மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் விலையை மூன்றாவது முறையாக இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆட்டோமொபைல் துறையினரின் செலவினம் அதிகரித்து வருகின்றது.
மேலும் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.
எப்போது முதல்
இதற்கிடையில் இந்தியாவில் ஏற்கனவே இருமுறை தனது கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசூகி நிறுவனம், மூன்றாவது முறையாக உயர்த்த திட்டமிட்டு வருகின்றது. இந்த விலை அதிகரிப்பானது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எவ்வளவு அதிகரிப்பு என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
பங்கு சந்தைக்கு தாக்கல்
இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி இந்தியா, மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மாருதியின் அனைத்து மாடல் கார்களின் விலையும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
முக்கிய காரணம் என்ன?
நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பானது, மாருதி சுசூகியின் உற்பத்தி விலையினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் விலையை அதிகரிக்க முக்கிய காரணமாக இது அமைந்துள்ளது. ஆக செப்டம்பர் 2021 முதல் மாருதியின் அனைத்து கார்களின் விலையும் மாடல்களுக்கு ஏற்ப அதிகரிக்கலாம் என தெரிகிறது.
விலை அதிகரிப்பு எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதத்தில் தான் மாருதியின் கார் விலையானது 34,000 ரூபாய் வரையில் அதிகரித்தது. இதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் கார் விலை 1.6% வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போதும் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனினும் இந்த முறை எவ்வளவு விலை அதிகரிக்கும் என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
மற்ற நிறுவனங்களின் நிலை
மாருதி சுசூகியை தொடர்ந்து மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது வருவாயினை அதிகரிக்கும் எனலாம்.