இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி தனது விற்பனை மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுப் புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான போட்டிகளைச் சந்தித்து வரும் வேளையில், வர்த்தகத்தைத் தொடர்ந்து தக்கவைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் இந்தியச் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவும் மாருதி சுசூகி முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுசூகி நிறுவனம் ஓரே இடத்தில் மிகப்பெரிய உற்பத்தி தளத்தை உருவாக்கும் பொருட்டுச் சுமார் 18,000 கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
10 லட்சம் கார்கள்
மாருதி சுசூகி ஹரியானாவில் அமைக்கப்படும் இப்புதிய தொழிற்சாலையில் வருடத்திற்குச் சுமார் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என இந்நிறுவனத்தின் தலைவரான ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
ஹாரியானா தொழிற்சாலை
கூர்கிராம்-ல் இருக்கும் பழைய தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிற்சாலையாகக் கருதப்படும் இப்புதிய ஹரியானா தொழிற்சாலை சுமார் 700 முதல் 1000 ஏக்கர் கிரீன்பீல்ட் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
75 சதவீதம் வேலைவாய்ப்பு
ஹரியானாவில் தற்போது அனைத்து வர்த்தகம் மற்றும் தொழிற்சாலையிலும் 75 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ள காரணத்தால் மாருதி சுசூகி சில தயக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று
பல வருடங்களுக்கு முன்பாகவே புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுக் காரணமாக இந்தப் பணிகள் முடங்கியது. தற்போது நிலைமை சரியான பின்பு மீண்டும் இத்திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் என மாருதி சுசூகி தலைவரான ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
ஹரியானா அரசிடம் பேச்சுவார்த்தை
மேலும் 75 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்படு குறித்து மாநில அரசுடன் ஆலோசனை செய்து வருவதாகவும், இரு தரப்புக்கும் சாதகமான முடிவுகளை எடுக்கப்பட வேண்டும் என ஹரியானா அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம் என ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.