இந்தியாவின் முன்னணி கார் விற்பனையாளாரான மாருதி சுசூகி இந்தியா, டீசல் கார்களுக்கு தொடர்ந்து தேவை அதிகம் இருந்து வரும் நிலையில் மீண்டும் டீசல் கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து வெளியான செய்தியொன்றில், முன்னனி கார் நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, அடுத்த ஆண்டில் டீசல் ரக கார்களை பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன.
பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப டீசல் எஞ்சின்களுடன் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அதிக முதலீடுகளை செய்ய வேண்டிய நிலையில், பல நிறுவனங்களும் டீசல் கார்கள் உற்பத்தியினை நிறுத்தின.
மானேசர் ஆலையை மேம்படுத்துதல்
அந்த வகையில் மாருதி சுசூகியும் தனது டீசல் ரக கார்கள் உற்பத்தியினை சற்று கைவிட்டது. எனினும் வாடிக்கையாளர்கள் தற்போது டீசல் ரக கார்களுக்கு தேவை அதிகம் இருப்பதால், டீசல் ரக கார்கள் அறிமுகம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களின் படி மாருதி சுசூகி இந்தியா மானேசரை தளமாகக் கொண்ட பவர்டிரெய்ன் ஆலையை மேம்படுத்துவதற்கான செயலில் இறங்கியுள்ளதாகவும் கூறுகின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை
அதுமட்டும் அல்ல மாருதியின் எர்டிகா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ரக கார்களில் பிஎஸ் 6 விதிகளின் படி, உள்நாட்டு சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த டீசல் ரக கார்கள் குறித்தான எந்த விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
கடந்த ஆண்டில் அறிவிப்பு
இது குறித்து நிறுவனம் தரப்பில், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து எங்களால் அறிவிப்பும் கொடுக்க முடியாது. மாறாக நாங்கள் மானேசர் ஆலையில் தற்போதைய அமைப்பை மேம்படுத்தவே நிறுவனம் எதிர்பார்க்கிறது. கடந்த ஏப்ரல் 26, 2019 அன்று மாருதி சுசூகியின் தலைவர் ஆர்சி பார்கவா ஏப்ரல் 1, 2020 முதல் டீசல் ரக கார்களை தனது போர்ட்போலியோவில் இருந்து விலக்குவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
செவிமடுக்காத பங்கு விலை
இதற்கிடையில் இன்று இதனையெல்லாம் செவிமடுக்காதது போல, மாருதி சுசூகி இந்தியாவின் பங்கு விலையானது பலத்த சரிவில் காணப்படுகிறது. தற்போது மாருதி சுசூகி இந்தியாவின் பங்கு விலையானது 72.55 ரூபாய் சரிந்து, 7,661 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கிட்டதட்ட 1 சதவீத சரிவாகும்.