கொரோனா வருவதற்கு முன்பே இந்தியாவில் பொருளாதார பிரச்சனை இருப்பதாகச் சுட்டிக் காட்டிய துறை ஆட்டோமொபைல் தான்.
2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவு, உற்பத்தி குறைப்பு, டீலர்கள் கடையை மூடுவது, லே ஆஃப் வரை சென்றது பிரச்சனை.
கொரோனா வைரஸ் வந்த பின் கையில் பணம் இல்லை, லாக் டவுன் என மொத்தமும் காலியாகிவிட்டது. ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறை மொத்தமாக படுத்தேவிட்டது.
விற்பனை சரிவு
ஆட்டோமொபைல் டீலர்கள் அமைப்பான Federation of Automobile Dealers Associations (FADA) கணக்குப் படி, பயணிகள் வாகனங்கள், கடந்த மே 2019-ல் மொத்தம் 2,35,933 வாகனங்கள் பதிவானதாம். ஆனால் இந்த மே 2020-ல் வெறும் 30,749 வாகனங்கள் தான் பதிவாகி இருக்கிறதாம். இது 86.97 % விற்பனை சரிவு.
இரு சக்கர வாகனங்கள்
அதே போல இரு சக்கர வாகனக்கள் மே 2019-ல் 14,19,842 விற்பனை ஆனதால், ஆனால் இந்த மே 2020-ல் வெறும் 1,59,039 வாகனங்கள் தான் விற்பனை ஆகி இருக்கிறதாம். ஆக இது 88.8 % விற்பனை சரிவு. வணிக வாகனங்கள் 96.63 % விற்பனை சரிந்து இருக்கிறதாம்.
ஒட்டு மொத்தமாக எவ்வளவு
ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு 96.34 %-மாக இருக்கிறதாம். ஒட்டு மொத்தத்தில் எல்லா வகையான வாகனங்களின் விற்பனை 88.8 % சரிந்து இருக்கிறது என கணக்கு சொல்கிறது ஆட்டோமொபைல் டீலர்கள் அமைப்பான Federation of Automobile Dealers Associations (FADA).
உற்பத்தி சரிவு
விற்பனை ஒரு பக்கம் சரிவிகிறது என்றால், வாகனங்களை உற்பத்தி செய்து என்ன பயன்? எனவே, மாருதி சுசூகி தன் உற்பத்தியை கடந்த மே 2020-ல் 97.5 % குறைத்து இருக்கிறது. மே 2019-ல் 1,51,188 வாகனங்களை தயாரித்த மாருதி மே 2020-ல் 3,714 வாகனங்களைத் தான் தயாரித்து இருக்கிறார்களாம்.
உற்பத்தி தொடக்கம்
மாருதி சுசூகி நிறுவனம், ஏறத் தாழ 40 நாட்கள் லாக் டவுனுக்குப் பின், தன்னுடைய உற்பத்தியை ஹரியானாவில் இருக்கும் மானேசர் ஆலையில் கடந்த மே 12-ம் தேதி தான் தொடங்கியது. குருகிராம் ஆலையில் மே 18-ம் தேதி உற்பத்தியைத் தொடங்கியது நினைவு கூறத்தக்கது.