சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தகச் சந்தைக்கு ரஷ்யாவும், சீனாவும் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இரு நாடுகளின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் கடுமையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது.
இந்த நெருக்கடி மூலம் இந்தியாவுக்கும் இந்திய நிறுவனங்களுக்குச் சில இடத்தில் நன்மை உருவானாலும், சில இடத்தில் பிரச்சனை உருவாகி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
உதாரணமாகச் சீனாவில் உருவாகியுள்ள நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் மூலம் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்திற்குப் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.
சீனா
இந்தியாவில் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலானவை அதிகளவில் சீனாவின் உதிரிப்பாகங்களை அதிகளவில் நம்பி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் மக்கள் போராட்டம் அதை இரண்டையும் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் ஆகியவை சீனாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்க உள்ளது.
மாருதி சுசூகி
இந்த நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் தயாரிப்புக்கு மிகவும் முக்கியமான செமிகண்டக்டர் தயாரிப்புப் பாதிக்கப்படும் காரணத்தால் இந்திய தொழிற்சாலைக்குக் கிடைக்கும் செமிகண்டக்டர் சிப் கிடைக்கும் எண்ணிக்கை குறைத்து மாருதி சுசூகி கார்களின் தயாரிப்பும், டெலிவரியும் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் மாத உற்பத்தி
இதன் எதிரொலியாக மாருதி சுசூகி நிறுவனம் இந்த டிசம்பர் மாதம் 135,000 முதல் 140,000 கார்களை மட்டுமே தயாரிக்கும் என்றும் இது கடந்த 13 மாதத்தில் மிகவும் குறைவான அளவீடாகும். கடந்த சில நாட்களாகச் செமிகண்டக்டர் சிப் விநியோகம் மோசமடைந்துள்ளது, இதனால் சுமார் 10,000 கார்கள் உற்பத்தி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
சராசரி விற்பனை விலை
மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி கடைசியாக அக்டோபர் 2021 இல் 1.35 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசூகி பல மாடல் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஒரு காரின் சராசரி விற்பனை விலை 5.51 லட்சம் ரூபாயாக உள்ளது.
551 கோடி ரூபாய் இழப்பு
இதன் அடிப்படையில், தற்போது சீனாவில் இருந்து வரும் செமிகண்டக்டர் சிப் வருகை மூலம் சுமார் 10,000 கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மாருதி சுசூகி நிறுவனத்திற்கு 551 கோடி ரூபாய் அளவிலான வருவாய் இழப்பு ஏற்படும்.
செமிகண்டக்டர் சிப்
ஜூலை 2022 இல் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் உற்பத்தி 184,890 கார்களாக உயர்ந்து 2022 ஆம் ஆண்டின் உச்ச உற்பத்தி அளவை எட்டியது. இந்தக் காலகட்டத்தில் தான் செமிகண்டக்டர் சிப் சப்ளை நெருக்கடி தணிந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் சப்ளை கிடைத்தது உற்பத்தி மேம்பட்டது.
3 மாதம்
ஆனால், கடந்த மூன்று மாதங்களில் உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருவது மட்டும் அல்லாமல், நவம்பர் 2022 இல், மாருதி சுசூகி நிறுவனம் 152,786 கார்களை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மாருதி சுசூகி நிறுவன பங்குகள் 1.58 சதவீதம் சரிந்து 8,815.10 ரூபாயாக உள்ளது.