இந்திய ஆட்டோமொபைல் துறையில் எத்தனை புதிய நிறுவனங்கள் வந்தாலும், எவ்வளவு புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய காரை அறிமுகம் செய்தாலும் மாருதி சுசூகி இணையாகக் கார்களை விற்பனை செய்ய முடியாது.
இந்தியாவில் பல வெளிநாட்டுக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் வெளியேற முக்கியமான காரணம் மாருதி சுசூகி உடன் போட்டிப்போட்டு வெற்றி பெற முடியாத தான்.
இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எஸ்யூவி வர்த்தகச் சந்தையில் நீண்ட காலத் திட்டமுடன் மாருதி சுசூகி புதிதாக Grand vitara என்ற காரை அறிமுகம் செய்த கையோடு ஜூன் காலாண்டு முடிவுகளையும் வெளியிட்டு உள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டில் 440.80 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற நிலையில் 2022 ஜூன் காலாண்டில் 129 சதவீத வளர்ச்சியில் நிகர லாபமாக 1012.80 கோடி ரூபாய் லாபமாகப் பெற்றுள்ளது.
மாருதி சுசூகி வருவாய்
இதேபோல் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் 16,798.70 கோடி ரூபாயை வருவாயாகப் பெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டில் வருவாய் அளவு 50.52 சதவீதம் அதிகரித்து ரூ.25,286.30 கோடியாக உயர்ந்துள்ளது.
கோவிட் தொற்று
கோவிட் தொற்றுக் காரணமாகக் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மாருதி சுசூகி தொழிற்சாலை பணிநிறுத்தங்கள் மற்றும் இடையூறுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் இதை மாருதி சுசூகியின் உண்மையான செயல்திறனாகப் பார்க்க முடியாது.
மாருதி சுசூகி EBIT
இதேவேளையில் மாருதி சுசூகி 2022 ஜூன் காலாண்டில் சுமார் 4,67,931 கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டின் இதை ஜூன் காலாண்டில் 3,53,614 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும் இக்காலாண்டில் மாருதி சுசூகியின் EBIT வெறும் 0.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாருதி சுசூகி பங்குகள்
மாருதி சுசூகி பங்குகள் இன்று 1.62 சதவீதம் வளர்ச்சி அடைந்து 8,660.05 ரூபாயாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஜூலை 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மாருதி சுசூகி 15.16 சதவீதம் உயர்ந்து 1,140.35 ரூபாய் அதிகரித்துள்ளது.