நாட்டின் முன்னணி கார் விற்பனையாளாரான மாருதி சுசூகி கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு கார்களையும் விற்கவில்லை.
ஏனெனில் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதிலும் உள்ள தொழில்சாலைகள் முழுவதும் பூட்டப்பட்டுள்ளன.
மேலும் ஷோரூம்களும் மூடப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்ல லாக்டவுன் காரணமாக மக்கள் தங்கள் வருமானத்தினை இழந்து வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
குறைந்து போன விற்பனை
இந்தியாவினை பொறுத்தவரையில் பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த ஆண்டே வாகனத்துறை பெருத்த அடி வாங்கியது எனலாம். இந்த நிலையில் தற்போது தான் அதிலிருந்து மீளத் தொடங்கி விற்பனையை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதுமட்டும் அல்ல, பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகன விற்பனையை தற்போது தான் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளன.
மார்ச் மாதத்தில் விற்பனை
கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை 47.4% ஆக அதிகரித்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாதத்தில் 1 வாகனம் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது வரலாறு காணாத ஒன்றாலும். மாருதி சுசூகி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,50,000 கார்களை சாதாரண நிலைமைகளின் கீழ் உற்பத்தி செய்கிறது. இதனால் இது நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர் என தனது நிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தது.
இவ்வளவு தான் ஏற்றுமதி?
மேலும் இது ஏற்றுமதியும் செய்து வரும் நிலையில், முந்த்ரா துறைகமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 632 யூனிட்களை மட்டும் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா, ஆங்கில செய்தி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஏப்ரலில் எப்போதும் முன்னோடியில்லாத மாதமாக இருக்கும் என்பதை கூறியிருந்தார்.
உற்பத்தியை செய்ய முடியாது
சில அசாதாரண விஷயங்களும் நடக்கும் என்றும் பார்கவா கூறியிருந்தார். அவர் கூறியது போலவே ஏப்ரல் மாதத்தில் விற்பனை ஏதுமே இல்லை. அதோடு பார்கவா ஒரு காரின் அனைத்து மூலதன் பொருட்களும் கிடைக்காவிட்டால் ஒரு காரை தயாரிக்க முடியாது. ஆக இங்கே யாராவது என்னிடம் உற்பத்தியை தொடங்க கூறினாலும் எனக்கு அது உதவாது. ஆக உற்பத்தியை தொடங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
உற்பத்தி தொடக்கமா?
இதற்கிடையில் மாருதி சுசூகி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தனது ஹரியானவில் மானேசரில் உள்ள உற்பத்தி ஆலையை மீண்டும் தொடங்க அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஏனினும் அது பராமரிப்புக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.