இந்தியாவின் முன்னணி கார் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த வருடத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான வாகனங்களை இந்த மார்ச் மாதம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இது இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது மட்டும் அல்லாமல் இனி வரும் காலத்திலும் சிறப்பான வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
2020ல் படுமோசம்
2020 மார்ச் மாதம் ஒரு பக்கம் கொரோனா பீதி மறுபக்கம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்கொண்டு வந்த பிரச்சனை என மொத்த ஆட்டோமொபல் துறையும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தது.
லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின்பு ஆட்டோமொபைல் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதைத் தொடர்ந்து தற்போது அதிகளவிலான விற்பனை அளவீடுகளை நிறுவனங்கள் பதிவு செய்து வருகிறது.
மாருதி, டாடா அசத்தல்
மாருதி சுசூகி நிறுவனம் மார்ச் 2020ல் 83,792 கார்களை விற்பனை செய்த நிலையில் மார்ச் 2021ல் 1,67,014 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதேபோல் டாடா மோட்டார்ஸ் 11, 012 வாகனங்களில் இருந்து 66,609 வாகனங்கள் வரையில் விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா, எய்ச்சர், எஸ்கார்ட்ஸ்
மாருதி, டாடா நிறுவனங்களைத் தொடர்ந்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 3383 வாகனங்களில் இருந்து 16,700 வாகனங்களையும், எய்ச்சர் 1,499 வாகனங்களில் இருந்து 7,037 வாகனங்களையும், எஸ்கார்ட்ஸ் 5,444 வாகனங்களில் இருந்து 12,337 வாகனங்கள் வரையில் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது
LTC சலுகைக்கு மார்ச் 31 கடைசி
இந்த அதிரடி விற்பனை உயர்வுக்கு மத்திய அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு அளித்த leave travel concession சலுகைக்கான மார்ச் 31 கடைசி நாளாக இருக்கும் காரணத்தால் இந்த மாதம் அதிகளவிலான விற்பனை பதிவாகியுள்ளது.
முதல் கார் உரிமையாளர்கள்
இந்தச் சலுகை மூலம் முதல் முறை கார்களை வாங்குவோர் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மார்ச் மாத முடிவில் சிறப்பான வர்த்தகத்தை அடைந்துள்ள காரணத்தால் பல ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளும் இன்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.