இந்தியா முழுவதும் பல வருடங்களாகச் சிறிதும், பெரிதுமாகக் கிரிப்டோகரன்சியை மையப்படுத்தி மோசடிகள் நடந்து வருகிறது. ஆனால் தற்போது நடந்துள்ள மோசடி மூலம் மிகப்பெரிய தொகையை மக்கள் இழந்துள்ளனர்.
போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை 1,000 நபர்களை ஏமாற்றியதாக டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) ஒருவரைக் கைது செய்துள்ளது.
எம்பிஏ பட்டதாரி
எம்பிஏ பட்டதாரியான ஆஷிஷ் மாலிக் என்பவர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அவர்களின் முதலீட்டில் 20 சதவீதத்தை லாபமாகக் கொடுப்பதாகக் கூறி பணத்தைத் திரட்டியுள்ளார்.
ரஷ்யா எண்ணெய் நிறுவன
குற்றம் சாட்டப்பட்டவரான ஆஷிஷ் மாலிக் மற்றும் அவரது கூட்டாளிகள் திரட்டிய பணத்தை ரஷ்யா எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக நம்பவைத்தாகப் பாதிக்கப்பட்டவர்களைப் புகார் அளித்துள்ளனர்.
20 சதவீதம் லாபம்
காவல்துறை விசாரணையில் ஆஷிஷ் மாலிக் தலைமையில் இயங்கும் இக்கூட்டம் 20 சதவீதம் லாபத்தைத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தியதும் தெரிய வந்ததுள்ளது.
கிரிப்டோகரன்சி
மேலும் இந்த மோசடி கும்பல் திரட்டப்படும் முதலீடுகள் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் கிரிப்டோகரன்சி-களில் முதலீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். இதற்காக ரஷ்யாவின் ஒரு பெரிய பெட்ரோலிய நிறுவனம் மே 16, 2016 அன்று பாஸ்சிம் விஹாரில் ஹோட்டல் ராடிசன்-ல் கருத்தரங்கு நடத்துவதாகச் செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளனர்.
ரோஸ்னெஃப்ட் ஹெட்ஜ் ஃபண்ட்
தற்போது காவல் துறை தேடி வரும் சந்தீப் கௌஷிக், சுனில் சிங் சௌஹான் மற்றும் கைது செய்யப்பட்டு உள்ள ஆஷிஷ் மாலிக் ஆகியோர் தங்களை ரோஸ்னெஃப்ட் ஹெட்ஜ் ஃபண்ட், ஜாக்பாட்மேனியா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கருத்தரங்கில் பேசியுள்ளனர்.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்
பணத்தைத் திரட்டுவதற்காகக் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் இணையதளமும் உருவாக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்குத் தனிப்பட்ட கணக்குகள் வழங்கப்பட்டு 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்த பிறகு, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்-ல் இருந்து மொத்த பணத்தையும் பிட்காயின் ஆகப் பெற்றுக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.
லுக்-அவுட் அறிக்கை
டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் வங்கி கணக்கு அறிக்கைகளை ஸ்கேன் செய்து அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கினர். தற்போது ஆஷிஷ் மாலிக் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இணை குற்றவாளிகளான சந்தீப் கௌசிக் மற்றும் சுனில் சிங் சவுகான் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர், மேலும் அவர்களுக்கு எதிராகப் போலீசார் லுக்-அவுட் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.