அரசியலுக்கும், சினிமாவுக்கும் நீண்ட காலமாகவே ஒரு பந்தம் இருந்து வருகிறது. நடிகராக திரையுலகில் இருந்து அதன் பின்னர் அரசியலுக்கு வந்து மக்களின் செல்வாக்கை பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. 1977-ஆம் ஆண்டில் சுமார் 49 ஆண்டுகள் கழித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தற்போது அந்த சாதனையை விஜய் நிகழ்த்துவாரா? என்பது தான் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு முன்னர் 1977-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் சுமார் 10 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சி செய்தார். அவருக்குப் பின் திரைத்துறையில் இருந்து வந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடித்து முதலமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான ஆட்சியை உருவாக்கினாலும், அதற்கு அடித்தளம் அமைத்தது என்னவோ எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.
அனால் தன்னந்தனியாக தனக்கென ஒரு கட்சியை அமைத்து, தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரை வைத்து முதல்முறையாக போட்டியிட்டாலும் மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்று எம்.ஜி.ஆர்-ஐ போலவே விஜய்யும் அரசியலில் ஒரு புது சாகசத்தை நிகழ்த்துவார் என்பது காலையிலிருந்து நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் மூலம் தெளிவாகிறது.
அதோடு பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் இடைத்தேர்தல் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது இதற்கு முன்னரே தேர்தல் ஆணையத்தின் சார்பில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து மற்றொரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது விஜய் எந்தத் தொகுதியை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது
திமுக, அதிமுக அரசியலுக்கு ஒரு மாற்றாக எந்த கட்சியினரிடமும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் அறிவித்ததே தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு ஆதரவு தந்ததற்கான முக்கிய காரணம். விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது ஊழலற்ற நிர்வாகம், சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தருவதாக உறுதியளித்தார். இது ஒரு புறம் இருக்க தனது 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை மக்களுக்காக முழுமையாக விடுத்து முழு நேரமும் அரசியலில் இறங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதுவும் மக்களுக்கு நம்பகத்தன்மை அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்தது.
இந்தக் கட்டுரை எழுதும் வரை சுமார் 104 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் முதன்மை வகித்து வருகிறது. அடுத்ததாக திமுக 73 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவின் கிளைமேக்ஸ் நேரத்தை எட்டிவிட்டோம். இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகிவிடும். அதன் பிறகு விஜய் எடுக்கும் முடிவு மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். ஏனெனில் விஜய் தனது பிரச்சாரத்திலேயே பிற கட்சிகளின் அரசியல் கலாச்சாரத்தை எதிர்த்து தான் மக்களின் ஆதரவைப் பெற்றார். அப்படி இருக்கையில் விஜய் யாருடன் கைகோர்ப்பார்? அல்லது பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவாரா? என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு தற்போது தான் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக ஒரு புறம், மறுபுறம் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, இவர்களோடு மூன்றாவது பெரும் கட்சியாக விஜய்-யின் தவெக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தவெக தலைவருக்கு ஏற்பட்ட சோதனை: தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் பரப்புரை செய்து வந்தார். அப்படி கரூரில் அவர் பரப்புரை செய்யும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியதிலிருந்து பல பிரச்சனைகளை எதிர் கொண்ட அவருக்கு இச்சம்பவம் பெரும் சோதனையாகவே அமைந்தது. இதனால் பலர் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து யோசிக்கத் தொடங்கினர். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தேவையான நிதி உதவி செய்ததோடு, கட்சி நிர்வாகிகளை எல்லாம் அழைத்து எச்சரிக்கையாக செயல்பட நடவடிக்கை எடுத்தார்.
இப்படி பல பிரச்சினைகளை சந்தித்த விஜய்க்கு தங்களுடைய வாக்கு எண்ணிக்கையின் மூலம் மக்கள் பதிலளித்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். தமிழக அரசியல் களம் சுவாரசியமான மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் விஜய் தனக்கென இடத்தைப் பிடித்து மகுடத்தை சூட்டிக் கொள்வாரா? என்பதும் தெரியவந்துவிடும்.


Click it and Unblock the Notifications