தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை காரணம் காட்டி பல ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த பட்டதாரிகளே பயந்து பயந்து பணிபுரிகின்றனர். அதிலும் தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் நீண்ட நாள் ஆகியும் வேலை கிடைக்காததால், வேறு வேலை செய்யலாமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், கோடிங் கற்று இன்று மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறி இருக்கிறார் ஒரு இளம் பெண். தன்னுடைய 7 வயதில் கோடிங் கற்றுக்கொண்டு இன்று மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் அப்படி என்ன செய்தார்? என்ற விவரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
விகாஸ் ஆல்வேஸ் என்ற பயணர் தனது X பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் இந்த இளம் தொழில் முனைவோரை பற்றிய சுவாரசிய தகவல்களை வழங்கியுள்ளார். இந்தியாவில் பிறந்தவர் பிராஞ்சலி அவஸ்தி என்ற பெண். இவர் சிறுமியாக இருந்த போதே தன் குடும்பத்தினருடன் ப்ளோரிடாவிற்கு குடிபெயர்ந்தார். கோடிங் பக்கம் அவர் சென்றதே இல்லை.

அவருடைய தந்தையின் உந்துதலால் தனது 7 வயதில் கோடிங் கற்க தொடங்கினார். தந்தையால் ஆரம்பித்த பயணம் என்றாலும் நாட்கள் செல்ல செல்ல பிராஞ்சலிக்கு ஆர்வம் ஏற்பட தொடங்கியது. அதோடு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். 13 வயது ஆன பிறகு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் சென்றார்.
அப்போதுதான் ஆராய்ச்சியாளர்கள் அதிக அளவிலான டேட்டாவை வைத்துக்கொண்டு அதிலிருந்து தங்களுக்கு தேவைப்படும் டேட்டாவை பிரித்தெடுப்பதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டார். அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக பிராஞ்சலி 2022-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம்.. அதாவது தன்னுடைய 16-வது வயதில் "Delv.AI" என்ற தளத்தை உருவாக்கினார். இந்த இணையதளம் முக்கியமாக இணையத்தில் கொட்டிக் கிடக்கும் டேட்டாக்களில் இருந்து குறிப்பிட்ட விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு தங்களுக்கு தேவையான டேட்டாவை எளிதாகவும், வேகமாகவும் பிரித்தெடுக்க உதவுகிறது.
அவர் உருவாக்கிய தளம் விரைவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறியது. பின்னர் சில நாட்களில் மியாமி நகரை சேர்ந்த ஸ்டார்ட்அப் ஊக்குவிப்புத் திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு தான் பிராஞ்சலியின் வாழ்க்கையை மாற்றியது. இதில் கலந்து கொண்டு சிறந்த முதலீட்டாளர்களை கண்டுபிடித்தார். அதன் பிறகு ஆன் டெக் மற்றும் வில்லேஜ் குளோபல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பிராஞ்சலிக்கு சுமார் 450,000 டாலர்கள் முதலீடு கிடைத்தது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.3.7 கோடி.
அதன் பிறகு நிறுவனம் விரைவாக வளர்ச்சி அடைந்தது. நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியும் அதன் சேவைகளுக்கு கிடைத்த வரவேற்பும் நிறுவனத்தின், Delv.AI தளத்தின் மொத்த மதிப்பை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயாக மாற்றியுள்ளது. இதன் மூலம் மிக குறைந்த வயதில் இவ்வளவு பெரிய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கிய இளம் தொழில் முனைவோரில் ஒருவராக பிராஞ்சலி உருவெடுத்தார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு தனது பதினாறாவது வயதில் இவ்வளவு பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வெற்றிகரமாக நிறுவியுள்ளார். படித்துவிட்டு வாய்ப்பு வரும் என்று காத்திருக்காமல் வாய்ப்பை உருவாக்கி.. அதில் இவ்வளவு பெரிய சாதனையைச் செய்துள்ளார்.. என்றால் அதற்கு அவருடைய முயற்சியே காரணம். வேலை வருமா வராதா என்று எதிர்பார்க்காமல் அவர் எடுத்து வைத்த முதல் படி இன்று அவரை பெரிய தொழில் முனைவோராக மாற்றியுள்ளது. இவர் உண்மையிலேயே இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications