ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக எதையும் செய்வாள் என்பதற்கு உதாரணமாய் அமைந்திருக்கிறது சந்தனா என்பவரின் உண்மைக் கதை. MCA படித்துவிட்டு பிற நிறுவனங்களின் வேலைகளை எல்லாம் உதறி தள்ளிவிட்டு, தன் மகளுக்காகவே ஒரு சுய தொழிலை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தற்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேல் வருமானமும் பார்த்து வருகிறார். அப்படி என்ன செய்கிறார் சந்தனா?, அவருக்கு எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது? என்ற விபரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சந்தனா தன் கணவரான நவீன் காடேவுடன் இணைந்து 2016-ஆம் ஆண்டு "சீட் பாஸ்கெட்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைய சூழலில் கார்டனிங் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் பலரும் தங்கள் குடும்பத்திற்கு ஆர்கானிக் ஃபார்மிங் தான் நல்லது என்ற மனநிலையில் தங்கள் வீட்டு மொட்டை மாடியையே கார்டனாக மாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சந்தனா. இதனால் சிறு வயதிலிருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு, அவர் வெளியில் சென்றதே இல்லை. எந்த காய்கறியானாலும் அது அவர்களுடைய வீட்டு நிலத்திலேயே விளைந்து விடும். அதன் பிறகு திருமணம் ஆகி சந்தனா ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார்.

ஆனால் அங்கு நிலைமை அப்படி இல்லை. சிறு வயது முதலே வீட்டிலேயே விளையும் காய்கறிகளை பயன்படுத்திய அவர், மார்க்கெட்களில் காய்கறிகளை வாங்கத் தொடங்கினார். ஒரு சில நாட்களில் அவர் வாங்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். அதுவும் சாக்கடை தண்ணீரை கொண்டு கீரைகள் வளர்க்கப்படுவது குறித்த செய்திகள் அப்போது ஊடகங்களில் அதிகம் பரவியது. இந்த செய்தி சந்தனாவை மிகவும் பாதித்தது.
தன் மகளைப் பற்றி யோசித்த சந்தனா, இனிமேல் நச்சுத்தன்மை வாய்ந்த காய்கறிகளை வெளியில் இருந்து வாங்கவே கூடாது என முடிவு செய்தார். தன் மகளுக்கு எந்தவித பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தாத காய்கறிகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் வீட்டு பால்கனியை தோட்டமாக மாற்றினார். இதற்காக சந்தையில் விதைகளைத் தேடி சந்தனாவும், அவருடைய கணவர் நவீனும் அலைந்துள்ளனர். ஆனால் எங்கு பார்த்தாலும் ஹைபிரிட் விதைகள் மட்டுமே அவர்கள் கண்ணில் சிக்கியது. சரி வேண்டாம் என்று ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். அப்போதும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் வீட்டிற்கு வந்த விதைகள் அனைத்தும் தரமானதாக இல்லை.
சந்தையில் இருக்கும் தேவை என்ன? என்பதை அறிந்து கொண்ட அவர் தரமான நாட்டு விதைகளை மக்களுக்கு வழங்க முடிவு செய்தார். அதுதான் அவர்கள் தொடங்கிய சீட்பாக்கெட் நிறுவனம். கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பால்கனியில் விவசாயம் செய்வது என்பது வேறு அல்லவா. எனவே அதை கற்றுக் கொள்வதற்காக ஹைதராபாத்தில் ஒரு சில வகுப்புகளிலும் கலந்து கொண்டார். சுமார் 6 மாதக் கால பயிற்சி பெற்ற பிறகு ஒரு செடியை வளர்க்க எப்படி மண் கலவையை தயார் செய்ய வேண்டும்? என்று கற்றுக் கொண்டார்.
மேலும் இயற்கையாக பூச்சி வராமல் இருப்பதற்கு என்னென்ன பயன்படுத்த வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டார். சமையல் முடித்த பிறகு மீதமிருக்கும் சமையல் கழிவுகளை உரமாக மாற்றினார். முட்டையோடு, காபி தூள் போன்றவற்றையும் அதிகமாக பயன்படுத்தினார். இதற்காக தங்கள் சொந்த ஊரிலிருந்து நேரடியாக நாட்டு விதைகளை வாங்கினார். பால்கனியில் ஒரு தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவித்து வருகிறார். தான் கற்ற வித்தையை பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக சீட்பாஸ்கெட் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அவர்களுடைய சீட்பாஸ்கெட் இணையதளத்தில் வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய் பூசணி, வெந்தயம், பீட்ரூட், பாகற்காய் போன்ற அனைத்து விதைகளும் கிடைக்கிறது. அது மட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்ப்பதற்கான குரோ பாக்குகள் இயற்கையாக உருவாக்கப்பட்ட வறட்டிகள் என 200க்கும் மேற்பட்ட வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
முதன்முதலாக ரூ.1 லட்சம் வரை முதலீடு போட்டு தான் இந்த தொழிலை ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு மாதத்திற்கே வெறும் 2 ஆர்டர்கள் மட்டும்தான் வந்துள்ளது. ஆனால் இவர்கள் முயற்சியை மட்டும் விடவில்லை. இதன் காரணமாக இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்களை ஒவ்வொரு மாதமும் டெலிவரி செய்து வருகின்றனர். வெறும் ரூ.1 லட்சத்தில் தொடங்கப்பட்ட தொழில் இன்று ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறி வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் டர்ன் ஓவர் பெற்றுதருகிறது.


Click it and Unblock the Notifications