உலகின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் மார்ச் 2023 இல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. மார்ச் அறிவிப்புக்கு பின்பு 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிர்வாகம், மீதமுள்ள 6000 ஊழியர்களை கடந்த 2 நாட்களில் பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்த 6000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் பல முக்கிய பிரிவுகளில் இருந்து ஊழியர்களை நீக்கப்பட்டாலும், இந்தியாவை பொறுத்த வரையில் அதிகப்படியான உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்தியாவில் நிர்வாகம், மனித வள பிரிவு, மார்கெட்டிங் உட்பட பல முக்கிய பிரிவுகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த பணிநீக்க நடவடிக்கை போலவே இருந்தாலும் இந்த முறை உயர்மட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை சற்று அதிகம், ஏற்கனவே பல மூத்த அதிகாரிகள் மெட்டா இந்தியாவில் இருந்து வெளியேறிய நிலையில் சமீபத்தில் தான் சந்தியா தேவநாசன் மெட்டா இந்கியாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனம் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் உயர் அதிகாரிகளை கட்டம் கட்டி தூக்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தற்போது வெளியான அறிவிப்புகள் படி மெட்டா இந்தியா மார்கெட்டிங் தலைவர் அவினாஷ் பன்ட், மீடியா பார்ட்னர்ஷிப் தலைவர் சாகேத் ஜா சௌரப், லீகல் பிரிவு தலைவர் அம்ரிதா முகர்ஜி ஆகியோர் இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டு, தங்களின் பதவியில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்திய மெட்டா நிறுவனத்தில் இருந்து பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பலர் லின்கிடுஇன் தளத்தில் வெளிப்படையாக தான் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் மெட்டா நிறுவனத்தில் பிஸ்னஸ் இன்ஜினியராக இருக்கும் சுரபி பிரகாஷ் என்பவர் லின்கிடுஇன் தளத்தில், பணிநீக்கம் செய்யப்பட்டது சோகம் தான் ஆனால் மகிழ்ச்சியாகவும் உள்ளது. பல நாட்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் இருக்கும் நிலை இனி இருக்காது என பதிவிட்டு உள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 21000 ஊழியர்களை நவம்பர் 2022 முதல் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் கடைசி கட்டமாக 6000 ஊழியர்களை கடந்த 2 நாட்களாக பணிநீக்கம் செய்து வருகிறது. இனி வரும் காலத்தில் பணிநீக்கம் தொடருமா என்பது பெரும் கேள்வி தான்.