ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஏஐ தொழில்நுட்பங்களின் நவீன அமைப்புகளை சோதனை செய்த அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஆடிப்போய் நிற்கின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் ஏஐ ஏஜென்ட்டுகள் அண்மை காலமாக கட்டுப்பாட்டை மீறி தாங்களாகவே செயல்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மெட்டா நிறுவனம் , தனது சைபர் பாதுகாப்பு சோதனையின் போது தங்களின் ஏஐ மாடல் ஒன்று தற்செயலாக மற்றோர் நிறுவனத்தின் அமைப்பிற்குள் நுழைந்து ஹேக் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சைபர் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனம் தனது ஏஐ மாடல்களின் பாதுகாப்பு மற்றும் திறன்களை சோதிப்பதற்காக 'இரெகுலர்' (Irregular) என்ற ஒரு பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளது. அப்போது ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்ப தவறு காரணமாக மெட்டாவின் ஏஐ மாடல் மூன்றாம் தரப்பு சேவையில் இருந்த ஒரு பாதுகாப்பை மீறி சென்று அடையாளம் தெரியாத வேறு ஒரு நிறுவனத்தின் அமைப்பிற்குள் நுழைந்து அதன் உள் சூழலை மாற்றி அமைத்துள்ளது.
மெட்டாவால் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கூறப்பட்ட மியூஸ் ஸ்பார்க் 1.1 (Muse Spark 1.1) என்ற ஏஐ மாடல்தான் இந்த ஊடுருவலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ள பேசிய இரெகுலர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், கடந்த வாரம் ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளிப்படுத்திய அதே சிக்கல்தான் இங்கேயும் நடந்துள்ளது என கூறியுள்ளார்.அதாவது ஏஐ மாடல்கள் பாதுகாப்பு தடைகளை எல்லாம் மீறி ஹேக்கிங் செய்கிறது என அவர் கூறியுள்ளார்.
மெட்டாவின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக, முன்னணி ஏஐ நிறுவனங்களான ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் ஏஐ ஏஜெண்டுகளும் சோதனையின் போது இதே போல எல்லை மீறி சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஆந்த்ரோபிக் கடந்த வாரம், தனது ஏஐ மாடல்கள் பாதுகாப்பு சோதனையின் போது மூன்று நிறுவனங்களை ஹேக் செய்ததாக ஒப்புக்கொண்டது.
ஓபன்ஏஐ அதன் ஜிபிடி-5.6 சோல் (GPT-5.6 Sol) ஏஐ ஏஜென்ட், சோதனையின் போது இணையத்தை அணுகி ஸ்டார்ட்அப் நிறுவனமான'ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) தளத்தில் ஊடுருவியது என்றும் மேலும் சில ஏஐ மாடல்கள் நிஜ மனிதர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அனுமதியற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தது.
ஏஐ தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்து வருகிறதோ, அந்தளவுக்கு அதன் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் சவாலாக மாறிவருகின்றன என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மனிதர்களின் நேரடி கட்டுப்பாடு இல்லாமல், ஏஐ ஏஜென்ட்டுகள் தாங்களாகவே முடிவெடுத்து இணையத்தில் செயல்படும் போது சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுக்கும் என்ற அச்சம் உலகளாவிய அளவில் எழுந்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது குறித்தும், அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் அரசுகளும் டெக் நிறுவனங்களும் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலைமை கைமீறி செல்லும் வரை விட்டுவிட கூடாது என நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

